உயிர்பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் சூதாட்டங்கள் காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் அதை குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தியது பல்வேறு விமர்சனங்களையும் விவாதங்களையும் கிளப்பியது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்டமசோதாவிற்கு ஆளுநர் அண்மையில் ஒப்புதல் அளித்து அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனைதொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில், ஈடுபடிவோர் மற்றும் விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கப்பட்டது.
போர்னோகிராபி பக்கங்களை தடை செய்க
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை பிரபலப்படுத்தும் விளம்பரத்தில் நடித்து வந்த நடிகர் சரத்குமார் ஒன்றிய அரசுக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளார். அதில், சூதாட்டத்திற்கு தடை என்று சொல்லும்போது, அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை விதித்திட வேண்டும் என்றும், முக்கியமாக இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், போர்னோகிராபி உள்ளிட்ட செயலிகள் மற்றும் இணையதளங்களுக்கு நிரந்தர தடை விதிக்க சமக தலைவரும் நடிகருமான சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.