Tamil News
Tamil News
Sunday, 23 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது போலியானது என்று பிடிஆர் விளக்கம் அளித்தும் இந்த சர்ச்சையானது நீண்டுக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

பிடிஆர் ஆடியோ

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு நிதி அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மர்ம நபர் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி ஒரு ஆடியோ இணையத்தில் வைரலாகியது.

அந்த ஆடியோவில், "உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்ற உரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையானது.

அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல் 

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களும், சர்ச்சை ஆடியோ குறித்து முதல்வர் உரிய விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில்,  அவரது அமைச்சர் பதவி கூட பறிக்கப்படலாம் என்று சில ஊடகங்கள் விவாதங்களை நடத்தின.

விளக்கம் அளித்த பிடிஆர்

இந்த நிலையில், அமைச்சர் பிடிஆர். தியாகராஜன் சர்ச்சை காணொளி தொடர்பாக தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் மூன்று பக்க விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், “ மாநில அமைச்சரவையில் நான் வகிக்கும் துறைகள், ஆடம்பரமாகவோ முழு சக்தியுடனோ வசதியுடனோ சமூக ஊடகங்களில் தொடர்ந்து மும்முரம் காட்டவும் அங்கு நிகழும் மூர்க்கத்தனமான சேறுபூசல்களுக்கு மறுப்புகளை வெளியிடுவதற்கும் என்னை அனுமதிப்பது இல்லை. 

வலிமையான தாக்கத்தை உருவாக்கவும் முன்னேற்றத்தைக் கொண்டு வரக்கூடிய துறைகளில் கவனம் செலுத்துவதே அரசு ஊழியரின் அடையாளம் என்று நம்புகிறவன் நான். இதனாலேயே (முதல் முறை அமைச்சர் என்ற முறையில்) எனக்கு முதல்வர் ஒதுக்கிய பல பொறுப்புகளின் முழு வீச்சையும் உணர்ந்து, ஜூன் 2017இல் தொடங்கப்பட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பதவியிலிருந்து தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்தேன்.

அதன்பிறகு மார்ச் 20, 2023 முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் நான் முழுமையாக ஈடுபட்டு மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாலை அமர்வின் போது நான்கு துறைகளுக்கான துணை மானிய கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருந்தபோது, வெளியே தவறான முறையில் ஜோடிக்கப்பட்ட 26 நொடிகள் ஓடக்கூடிய ஆடியோ பரப்பப்பட்டது. 55 துறைகளின் மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் ஏப்ரல் 21ஆம் தேதி நிறைவேற்றப்பட்டவுடன் 4,13,639 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஏப்ரல் 22ஆம் தேதி சனிக்கிழமை, பட்ஜெட் காரணமாக தேங்கிய கோப்புகளில் நான் கவனம் செலுத்தினேன். இதனால் இன்றைய தேதியில் எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை.

எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் இன்றியமையாத பேச்சுரிமைக்கான வலுவான ஆதரவாளராக இருப்பவன் நான்.  மக்களின் நல்ல தீர்ப்பை நம்பும் ஓர் அரசியல்வாதி என்ற முறையில், இன்றைய சமூக ஊடகங்களில் நடக்கும் அவதூறு பிரசாரத்திற்கு மறுப்புகளை வழங்குவது ஆபத்தான நெருப்புக்கு ஆக்ஸிஜனை வழங்குவது போன்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவன் நான்.

எந்த தீய சக்தியும் பிரிக்க முடியாது!

இப்போது, பொதுவெளியில் என்னை வில்லனாக சித்தரிப்பதில் தோல்வியடைந்ததால், எனக்கு எதிரானவர்களின் உத்தியில் மாற்றம் தெரிகிறது; தனிமையில் சிலுவையில் அறையப்பட்டவன் போலவும் ஊழலை எடுத்துரைப்பவர்களுக்கு இணங்காதவன் போலவும் கட்சியில் தனிமையாக பலி கொடுக்கப்பட்டவன் போலவும் என்னை சித்தரிக்க அவர்கள் முயன்றுள்ளனர். பொது வாழ்வில் நான் எதைச் செய்தாலும் அது என் தலைவரான திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தான் என்றும் எங்களைப் பிரிக்கும் எந்த தீய முயற்சியும் வெற்றி பெறாது என்பதையும் மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

ஒரு சமூக ஊடக பதிவு இப்போது வருத்தமளிக்கும் விகிதத்தில் மீண்டும் வெளியிடப்பட்டதால், இந்த நேரத்தில் நான் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்: இது நேர்மையற்ற அரசியல் நபர்களால் மீண்டும், மீண்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. மேலும் பாரம்பரிய ஊடகங்களான ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருப்பவற்றின் செயலைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன். இதுபோன்ற புனையப்பட்ட, தீங்கிழைக்கும் மூன்றாம் நிலை தகவலை (ஒருவரது கட்டுரை, ஒருவரின் கருத்துகள், சித்தரிக்கப்படும் ஆடியோ, தெரியாத நபருடன் நடந்ததாக கூறப்படும் உரையாடல்) அவை வெளியிடுகின்றன. பொதுவெளியில் கிடைக்கும் தொழில்நுட்ப பகுப்பாய்வு மூலம் அந்த ஆடியோ உண்மையானது அல்ல என்பது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்த நேரத்தில் நான் கூற விரும்பும் இரண்டே விஷயங்கள்!

1. எளிதில் அணுகக்கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புனையப்பட்ட அல்லது இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஆடியோ கிளிப்களை உருவாக்கும் திறனுடன், இன்னும் அதிகமான தீங்கிழைக்கும் உள்ளடக்கத்துடன் கூடிய ஆடியோக்கள் அல்லது வீடியோக்கள் இனி வரும் நாட்களிலோ மாதங்களிலோ வந்தால் கூட அவற்றைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. நான் ஏற்கெனவே @ptrmadurai என்ற என் ட்விட்டர் பக்கத்தில் புகழ்பெற்ற திரைப்படமான "The Great Escape" இல் இருந்து ஒரு உதாரணத்தை மறு ட்வீட் செய்துள்ளேன்.

2. பொறுப்புள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துபவையாக செயல்பட வேண்டிய பாரம்பரிய ஊடகங்கள், முதல்நிலை தகவல் அல்லது குறைந்தபட்சம் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட இரண்டாம் நிலை தகவல்களை மட்டுமே தெரிந்த மூலங்களிலிருந்து சரிபார்த்து ஒருவரை குற்றம்சாட்ட வேண்டும் அல்லது புகார் கூற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மூன்றாம் நிலை தகவல்களை சரிபார்க்காமல் ஒளிபரப்பும் ஆன்லைன் தளங்களின் ஒளிபரப்பால் அவற்றின் நிதி தேவை வேண்டுமானால் பூர்த்தி ஆகலாம். ஆனால் இது ஜனநாயகத்தில் பாரம்பரிய ஊடகங்களின் அந்தஸ்தை சிதைக்கிறது. இத்தகைய திசைதிருப்பல்கள் யாருக்கும் உதவாது மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வை பாதிக்கும் முக்கிய விஷயங்கள் மீதான அர்த்தமுள்ள பொது விவாத திறன்களை அவை தடுக்கும்.

சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம்!

இந்த சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய எனது ஒரே அறிக்கை இதுதான். இதுபோன்ற தீங்கிழைக்கும் அவதூறுகளை புறக்கணித்துவிட்டு எனது இயல்பான பணிக்குத் திரும்புவேன். நிச்சயமாக, இத்தகைய அவதூறுகள் அதிகபட்ச சகிப்புத்தன்மையின் நிலையைக் கடக்க வேண்டும். இந்த விஷயங்களில் வழக்கு தொடர்ந்து தீர்வு காண பல மாதங்கள் ஆகும் என்பதை உணர்ந்தாலும், இதுபோன்ற செயல்கள் அப்பட்டமான பொய்கள் மற்றும் ஏமாற்றும் போக்குக்கு மேலும் விளம்பரத்தைத் தரும் என்பதை உணர்ந்ததால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” என்று பிடிஆர் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பாஜக மூத்த தலைவர்கள் விபி துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து ஆடியோ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், "ஆடியோ விவகாரத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்மீது நடவடிக்கை எடுத்து தடயவியல் விசாரணை செய்து உண்மையை கண்டறிய வேண்டும். ஆடியோவில் இருப்பது அவர் குரல் தானா அல்லது வேறு ஒருவரின் குரலா என்பதை கண்டறியும்படி ஆளுநரிடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் தலைவர் ஆளுநர்தான். அதனால், அவரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். ஆளுநரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அரசின் கஜானாவுக்கு செல்ல வேண்டியது தமிழக மக்களின் வரிப்பணம். மக்களின் வரிப்பணத்தை கொண்டு நன்மை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் 30 ஆயிரம் கோடியை எடுத்துவிட்டார்கள் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.

பிடிஆரும் சபரீசனும் உறவினர்கள்தான். இதனால், ஸ்டாலினையும் பிடிஆரையும் பிரிக்க வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. மக்கள் வரிப்பணம் தனி மனிதனிடம் சென்றுவிட்டதே என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.