புகையிலைப் பொருட்களுக்கு தடை நீக்கம்
கடந்த 2006-ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரசட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குட்கா, பான்மசாலா உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.
தமிழக அரசு மேல் முறையீடு
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கே.எம். ஜோசப் தலைமையில் விசாரிக்கப்பட்டது. விசாரணையில், குட்கா விற்பனையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுபோன்ற தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. சட்டத்தை மீறினால், அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கை மட்டுமே மாநில அரசு எடுக்க முடியும் என வாதிட்டனர்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், மக்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டே குட்கா உள்ளிட்டவற்றுக்கு தடை விதித்திருப்பதாகவும், சிலரது லாபதுக்காக மக்களின் ஆரோக்கியத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அமைப்புகளை நாடி தங்களுக்குத் தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.