Tamil News
Tamil News
Monday, 01 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சரத் பவார் ராஜினாமா

கடந்த 1960 ஆண்டும் மே மாதம் ஒன்றாம் தேதி தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியதாக குறிப்பிட்டுள்ள சரத் பவார் அதே மே மாதத்தில், தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். சரத் பவார் காங்கிரஸ் கட்சியின் மீது கொண்ட ஈர்ப்பினால் இளைஞர் காங்கிரசில் இனைந்து, படிப்படியாக முன்னேறி, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் என பல உயர் பதவிகளை வகித்துள்ளார். 1999ம் ஆண்டு சோனியா காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத் பவார், 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் வேளாண்துறை அமைச்சராக பதவி வகித்தார். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சரவதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் சரத் பவார் பதவி வகித்துள்ளார். 

தனது 63 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் தேசிய அளவிலும், மாகாராஷ்டிர மாநில அளவிலும் பல்வேறு அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு சரத் பவார் துணை நின்றுள்ளார். இந்நிலையில் வயது முதிர்வாலும், உடல்நலக்குறைவாலும் தனது 83 வயதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் தற்போது வகிக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. எனவே இந்த பதவிக்காலம் முடிவடைந்த பின் தேர்தல் அரசியலில் ஈடுபடபோவதில்லை என தெரிவித்துள்ளார். 

பிரதமர் வேட்பாளர்

1991ம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதே, சரத் பவாருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதை விட்டுக்கொடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றார். மேலும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமராகும் எண்ணம் இருப்பதாலேயே இவர் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மறுக்கிறார் என்ற கருத்துக்கள் நிலவியது. மேலும் 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் சரத் பவார் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என பல யூகங்கள் நிலவி வந்தன. இதனால் காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் மூன்று அணிகளாக தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதினர். இந்நிலையில், அனைத்து யூகங்களையும் தவறாக்கி, தேர்தல் அரசியலில் இருந்தும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக சரத் பவார் அறிவித்திருப்பது, மகாராஷ்டிர மாநில அரசியலில் மட்டும் இல்லாமல், தேசிய அரசியலிலும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

மூத்த தலைவர்கள் அடங்கிய குழு

இன்று தனது ஓய்வை அறிவித்த சரத் பவார், தேசியவாத காங்கிரசின் அடுத்த தலைவரை கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிய குழு தேர்ந்தெடுக்கும் என அறிவித்துள்ளார். இந்த குழுவில், பிராஃபுல் பாட்டீல், சுனில் தாக்கரே, பி.சி.சாக்கோ, நர்ஹாரி சிர்வால், அஜித் பவார் (சரத் பவாரின் மருமகன்), சுப்ரியா சுலே (சரத் பவாரின் மகள்), ஜெயந்த் பாட்டீல், சாஹன் புஜ்பால், திலீப் வால்சே பாட்டீல், அனில் தேஷ்முக், ராஜேஷ் டோப், ஜிஜேந்திர அவாத், ஹாசன் முஷ்ரிஃப், தனஞ்செய் முண்டே, ஜெயதேவ் கெய்க்வாட் உள்ளிட்டோர் இருப்பர் எனவும் சரத் பவார் தெரிவித்துள்ளார். 

அடுத்த தலைவர் யார்? 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக அஜித் பவார் அல்லது சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் 2019ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் அஜித் பவார் கட்சியை பிளவுபடுத்தும் செயலில் ஈடுபட்டார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக தற்போதைய மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலேவிற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தொண்டர்கள் கண்ணீர்

தனது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டு நிகழ்ச்சியில், தனது ராஜினாமாவை சரத் பவார் அறிவித்ததால், தொண்டர்கள் அரங்கத்திலேயே எழுந்து, ராஜினாமா அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தினர். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரத் பவார் தனது அறிவிப்பை திரும்பபெறாவிட்டால் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிடுவதாக கூறினர். ஆனால் சரத் பவாரோ, தான் பதவியில் இருந்து மட்டுமே ஓய்வு பெறுவதாகவும், அரசியலில் இருந்தோ, கட்சிப்பணியில் இருந்தோ ஓய்வு பெறவில்லை எனவும் தெரிவித்தார். 

மேலும் அஜித் பவார் பேசும்போது, தேசியவாத காங்கிரசின் அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்றாலும், சரத் பவாரின் ஆலோசனைப்படியே அவர்கள் செயல்படுவார்கள் என கூறினார். எனினும் சரத் பவாரின் இந்த அறிவிப்பு மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.