தீவிரம் காட்டும் தேசிய கட்சிகள்
கர்நாடகாவில் வரும் 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு ஆளும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வரும் நிலையில், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸும் முழு முயற்சியும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக இரு கட்சிகளும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.
பாஜகவின் வாக்குறுதிகள்
இதற்கிடையே பாஜக தேசிய தலைவர்கள் கர்நாடகத்தில் மேற்கொண்ட பிரசாரத்தில் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசினர். குறிப்பாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம், தினமும் அரை லிட்டர் நந்தினி பால் பாக்கெட் இலவசம், உள்ளிட்ட பல்வேறு இலவசங்களையும் அறிவித்தனர். அதோடுமட்டுமல்லாமல் கன்னடத்தில் பிரபல நடிகராக உள்ள கிச்சா சுதிப்பும் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
காங்கிரஸுக்கு ஆதரவாக சிவராஜ்குமார்
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கன்னடத்தின் பிரபல நடிகரான சிவராஜ்குமார் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். அண்மையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தின்போது, அதே மேடையில், நடிகர் சிவராஜ் குமாரும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நான் ராகுல் காந்தியின் தீவிர ரசிகராக இங்கு வந்துள்ளேன். அவரின் பாரத் ஜோடா பயணத்தால் ஈர்க்கப்பட்டுள்ளேன். இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட பயணம் என்னை மிகவும் ஈர்த்துள்ளதாக கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம்...
இதனால் அம்மாநிலத்தின் இரு பிரபலங்களும் தேர்தல் களத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 192 இடங்கள் உள்ள அம்மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை பிடிக்கவும், வரும் நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாகவும் இத்தேர்தல் பார்க்கப்படுவது இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.