அதிகாரத்தை கைப்பற்றுவதில் மோதல்
ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில், இராணுவ படையினருக்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே போர் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக பலர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் தங்களது வீடுகளளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்த மோதலில் அப்பாவி மக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்
பதற்றமான சூழ்நிலை நிலவுவதன் காரணமாக சூடானில் மோதலை நிறுத்துமாறு ஐ.நா.சபை, மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த 3 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டு போரால் ஆயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை மீட்பதற்காக போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள், கப்பல், விமானங்களை அனுப்பி தங்களது நாட்டு மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், சில பகுதிகளில் தொடர்ந்து போர் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 நாட்களுக்கு போர் நிறுத்தம்
இதற்கிடையே சமாதான பேச்சு வார்த்தைக்கு இராணுவ தளபதியும், துணை இராணுவ தளபதியும் ஒப்புக் கொண்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகள் வலியுறுத்தல்
அதன்படி மே 4-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை, 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தெற்கு சூடான் அதிபர் சால்வா கீர் மயார்தீத்துடன் இரு தரப்பினரும் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து இரு தரப்பினரும் அமைதி பேச்சு வார்த்தை அந்நாட்டு மக்கள் உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.