Tamil News
Tamil News
Friday, 12 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் 

கர்நாடகாவில் கடந்த 10 ஆம் தேதி அம்மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அம்மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சியானது பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜக கட்சியானது பெரும் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை தொடர்ந்து நாடு முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சி தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக அகற்றம்

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளதாகவும், பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாஜகவுக்கு தக்க பாடம் 

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது; கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். 

ஒன்றிணைந்து பணியாற்றுவோம் 

திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்! இவ்வாறு அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

தொலைபேசி மூலம் வாழ்த்து 

முன்னதாக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆகியோருக்கும், கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள், டி.கே.சிவகுமார், சித்தராமையாக ஆகியோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.