Tamil News
Tamil News
Wednesday, 17 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

நீதிபதிகளின் மாற்றுக் கருத்து

ரூ.8 லட்சம் வருமானம் உள்ள ஏழைகளுக்கு உச்சநீதி மன்றம் அநீதி இழைத்துள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; உச்ச நீதி மன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 8 லட்ச வருமான ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு "செல்லும்!" என 3 நீதிபதிகளும் மாற்றுக் கருத்தை 2 நீதிபதிகளும் என்ற விகிதத்தில் தீர்ப்பு அளித்து உள்ளது.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது

உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு இரு வகைகளில் அரசியலமைப்பு சட்டத்தின் இரு முக்கிய அம்சங்களுக்கு எதிராக அமைந்து உள்ளது. அவற்றில் முதலாவது கல்வி, சமூக நிலை ஆகியவற்றில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 
இரண்டாவது, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப் படக் கூடாது என்பதாகும். பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள "மற்றவர்களை" அடையாளம் காண்பதற்காகவே பின்னாளில் காகா கலேல்கர் ஆணையமும், மண்டல் ஆணையமும் அமைக்கப் பட்டன. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண  மண்டல் ஆணையம் ஆய்வு செய்த 11 காரணிகளில் ஒன்று கூட தனித்த பொருளாதாரம் சார்ந்தவை அல்ல.  கடன், குடிசை வீடுகள், குடிநீர் வசதி இல்லாமை போன்ற சமூக பின்தங்கிய நிலைக்கு காரணமான அம்சங்கள் தான் கருத்தில் கொள்ளப் பட்டன.  

சமூகநீதியின் மீதான தாக்குதல்

சமூக ஏற்றத் தாழ்வுகளின் கொடிய அடக்குமுறைகளை இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர் என்பதால் தான் ஓபிசி மக்களுக்கு 
இட ஒதுக்கீடு மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது சமூகநிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல்,
 அடக்குமுறைகளை அனுபவிக்காமல்  பொருளாதார அடிப்படையில் மட்டும், அதுவும் கூட ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை
 ஏழைகள் என்று கூறி 10% இட ஒதுக்கீடு வழங்குவதும், அதை எந்த கேள்வியும் எழுப்பாமல் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் சமூகநீதியின் மீதான தாக்குதல் ஆகும்.
 


உயர்வகுப்பு  ஏழைகளின் மக்கள் தொகை

இட ஒதுக்கீடு என்றாலே புள்ளிவிவரங்கள் எங்கே? என்று கேட்கும் உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் அத்தகைய வினாவை எழுப்ப வில்லை. உயர்வகுப்பு ஏழைகளுக்கு  10% இட ஒதுக்கீடு வழங்க, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005-ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டு, 2010-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப் பட்ட சின்ஹோ ஆணையத்தின் அறிக்கை தான் அடிப்படையாக கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆணையத்தின் அறிக்கையில், உயர்வகுப்பு ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்று எந்தப் பரிந்துரையும் அளிக்கப் படவில்லை; மாறாக, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கலாம் என்று மட்டும் தான் குறிப்பிடப் பட்டு இருக்கிறது.  அதுமட்டும் இன்றி, உயர்வகுப்பு  ஏழைகளின் மக்கள் தொகையை அறிய எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. இதை 11.12.2019 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சமூகநீதி அமைச்சகமும் உறுதி செய்திருக்கிறது.

எந்த புள்ளி விவரமுமே இல்லாத உயர்வகுப்பு ஏழைகள்  இட ஒதுக்கீடு

இவ்வாறு எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படாமல் உயர்வகுப்பு ஏழைகளுக்கு எந்த அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது? அது குறித்து உச்சநீதிமன்றமும் எந்த வினாவும் எழுப்பாததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போது, அதை உறுதி செய்ய போதிய அளவில் புள்ளி விவரங்கள் இருந்தும் கூட, கூடுதல் புள்ளிவிவரங்களை திரட்ட வேண்டும் என்று கூறி அந்த  இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. ஆனால், எந்த புள்ளி விவரமுமே இல்லாமல் உயர்வகுப்பு ஏழைகள்  இட ஒதுக்கீடு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சமூகநீதி இரு அளவுகோல்களால் அளக்கப்படக் கூடாது. மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கு மிகக் கூடாது என்று 1962ம் ஆண்டில் பாலாஜி வழக்கிலும், 1992ம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், உயர்வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை அனுமதிப்பதற்காக, இட ஒதுக்கீட்டுக்கான  50% உச்சவரம்பு வளைக்க முடியாதது அல்ல என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.  இதுவும் சமூக அநீதியானது.

இடஓதுக்கீட்டின் அளவு மக்கள் தொகையை விட அதிகம்

ஒருபுறம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும் பகுதியினருக்கு கிரீமிலேயர் தத்துவத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.  மற்றொருபுறம் உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உயர் வகுப்பினருக்கான இடஓதுக்கீட்டின் அளவு அவர்களின் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது.ஆனால், பிற பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அவர்களின் மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவாகவே உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் முன்வர வேண்டும்

இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு  வளைக்கத் தக்கது தான் என்று உச்சநீதிமன்றமே கூறி விட்ட நிலையில்,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய அவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை, அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்தி நிர்ணயிக்க மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் முன்வர வேண்டும்.

நீதி கிடைப்பது என்பது அரிதுதான்

ஏழைகளுக்கான அளவுகோள் தெரியாத ..... அரசியல் வாதிகளின் ஊதுகுழலாக..... முக்கியமான தீர்ப்புகளில் அவ்வப்போது மாறும் உச்ச நீதிமன்ற பல நீதிபதிகள் கடவுள்களா? எங்கு போனாலும் நீதிக்காக நம்மிடம் (நீதிபதிகள்) வந்து தானே ஆக வேண்டும் என்ற மமதையா? பணத்துக்காக /பதவிக்காக / ஜாதிய வெறிக்காக / ஆடம்பர வாழ்க்கைகாக/ இப்படியாக பல மிகைப்படுத்திய தேவைக்காக மட்டுமே போராடும்..... நீதிக்காக நிற்காத பெரும்பாலான வக்கீல்கள்தான் இறுதியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக வருகிறார்கள். இப்படியாக வரும் பல நீதிபதிகளிடம் எப்படி சமூக நீதியை எதிர்பார்ப்பது? நீதி கிடைப்பது என்பது அரிதுதான்

உயர்ஜாதி ஏழைகள் என்ற தவறான அளவுகோல்

ஏழைகளுக்கான அடிப்படையை வருமானம், இருப்பிடம், வயிறார உணவு, மானம் மறைக்க துணி இவற்றை அடிப்படையாக வைத்து கொடுக்க வேண்டிய 
ஏழைகளுக்கான அளவுகோலை மாற்றி உயர்ஜாதி ஏழைகள் என்ற தவறான அளவுகோலை தற்போதைய பெரும்பாலான அரசியல்கட்சிகள் ஏற்கலாமா?

அநீதி அரசர்களே..!!!

இந்த நீதிபதிகளே இடஒதுக்கீடு 50% மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். என்று முன்பு தீர்ப்பு வழங்கிவிட்டு இப்போது அவர்களே எந்த விதமான அடிப்படையான ஆதாரமும் இல்லாமல் மீறுவார்களா? சமீபத்தில் வன்னியருக்கான இட ஒதுக்கீடு வழங்க சாதிவாரியான பதிவுகள் (தரவுகள்)
இல்லை என தள்ளுபடி செய்தார்கள். அதே நீதிமன்றங்கள் 10% இட ஒதுக்கீடு உயர்சாதி ஏழைகளுக்கு சாதிவாரியான பதிவுகள் (தரவுகள்) இல்லாமலே வழங்குகிறார்கள்? இந்திய அளவிலான 50% இட ஒதுக்கீடு அப்படியே யாருக்கும் ஒதுக்க இயலாது என்று தீர்ப்பு கூறி வரும் அநீதி அரசர்களே இந்த இட ஒதுக்கீடு யாருக்காக பாதுகாக்கப்பட்டு வந்தது? / வருகிறது?. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.