Tamil News
Tamil News
Sunday, 04 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்

இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.

மீண்டும் போராட்டம்

இதையடுத்து, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், விசாரணைக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து கடந்த மே மாத தொடக்கத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தை தொடங்கினர்.

மல்யுத்த வீராங்கனைகள் கைது 

கடந்த மே மாதம் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அவர்களை டெல்லி போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி அவர்கள் செல்ல முயன்றதால், போலீஸாருக்கும், வீரர், வீராங்கனைகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களை பேருந்தில் ஏற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர். 

சில விளையாட்டு வீரர்களுக்காவது மரியாதை கிடைப்பதில் மகிழ்ச்சி 

கைதான வீராங்கனைகளில் சங்கீதா போகட் மற்றும் வினீஷ் போகட் காவல்துறை வாகனத்தில் சிரித்துக் கொண்டே அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அந்த புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டது என்று பஜ்ரங் புனியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அடுத்ததாக, ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை அணி மற்றும் தோனிக்கு மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டிருந்தார். மேலும் அதில், குறைந்தபட்சம் சில விளையாட்டு வீரர்களுக்காவது மரியாதை கிடைப்பதில் மகிழ்ச்சி என்றும், எங்களைப் பொறுத்தவரையில் நீதிக்கான போராட்டம் தொடரும் என்றும் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 

பதக்கங்களை கங்கையில் வீசசென்ற வீராங்கனைகள் 

இதற்கு அடுத்தகட்டமாக, தாங்கள் பாடுபட்டு வென்ற பதக்கங்கள் இனி எங்களுக்கு தேவையில்லை என பஜ்ரங் புனியா அறிவித்திருந்தார். எங்களை மகள் என அழைக்கும் பிரதமர் மோடி, எங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து இதுவரை கேட்கவில்லை. துன்புறுத்தல்களுக்கு எதிராக பேசினால் சிறையில் அடைக்கிறார்கள் என்று கூறி பதக்கங்களை கங்கையில் வீசவதற்கு சென்றபோது அதை விவசாய சங்கங்கள் தடுத்து நிறுத்தினர்.

அமித்ஷாவுடன் சந்திப்பு 

நீண்ட நாட்களாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் இந்திய அளவில் பேசப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒடிசா ரயில் விபத்து உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியது. இதனால், மல்யுத்த வீரர்களின் போராட்டம் கண்டுகொள்ளாமல் போகுமா என்ற கோணத்தில்கூட பார்க்கப்பட்டது. இந்தநிலையில், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டில் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் நள்ளிரவு தாண்டி சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியானது.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்த சந்திப்பில் பிரிஜ் பூஷண் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தப்பட்டிருப்பதாக மல்யுத்த வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பில், மல்யுத்த வீரர்களுக்கு உறுதியான முடிவை உள்துறை அமைச்சர் வழங்கவில்லை, விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் அதன் பணியைச் செய்யும் என்றும், உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதாக மல்யுத்த வீரர்கள் தெரிவித்திருந்தனர்.

வதந்திக்கு விளக்கம்

இந்தநிலையில், சாக்‌ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து, மல்யுத்த வீரர்கள் போராட்டத்திலிருந்து வெளியேறியதாக வெளியான செய்தியை மறுத்து சாக்க்ஷி மாலிக் ட்விட்டரில் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், "போராட்டத்திலிருந்து நான் விலகியதாக வரும் செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்திலிருந்து நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம். சத்தியாகிரகப் போராட்டத்தை தொடர்ந்துகொண்டே, போராடும் அதேவேளையில் எனது ரயில்வே பணியையும் மேற்கொள்கிறேன். நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.