நட்டையே உலுக்கிய ரயில் விபத்து
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் இரண்டாம் தேதி இரவு 7 மணி அளவில் ஷாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் மாறி கிளைப்பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. அவை மற்றொரு தண்டவாளத்தில் வந்த பெங்களூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதியதில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன .இந்த ரயில் விபத்தில், 275 நபர்களுக்கு மேல் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இக்கோர சம்பவம் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
இந்நிலையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஐந்தாவது மண்டலம் ஈவேரா சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு அஸ்தி மண்டபம் முன்பு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், விபத்து குறித்து அஞ்சலி செலுத்து விதமாக பேனர் அமைத்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை செயல்தலைவர் ராஜசேகரன், செயலர் ஜவகர் ஹசன், யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பல்வேறு, சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டனர்.