Tamil News
Tamil News
Wednesday, 07 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

பிராமணர்களுக்குள் இரண்டு அணியா?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகருக்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் அண்ணாமலை பிராமணர்கள் பற்றி பேசிய  கருத்துக்களால் எரிச்சலடைந்த எஸ்.வி.சேகர் சமூக வலைதளங்களில் அண்ணாமலைக்கு எதிரான கருத்துக்களை பேசி வருகிறார். இவர்களுக்குள்ளான கருத்து மோதலில், அண்ணாமலையும் நரேந்திர மோடியும் தான் உண்மையான பிராமணர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது பிராமணர்களுக்குள்ளேயே இரண்டு அணியாக இருப்பதாக புலப்படுகிறது.   

அண்ணாமலை Vs எஸ்.வி.சேகர் 

அதற்கு முன் அண்ணாமலைக்கும், எஸ்.வி.சேகருக்கும் இடையே நடந்த கருத்து மோதல்களை பார்க்கலாம். சில மாதங்களுக்கு முன்பு திமுகவினரின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டு பேசிய போது, தனக்கு பல லட்சங்கள் செலவு ஆவதாகவும் நண்பர்கள்தான் அதை பார்த்துக்கொள்கிறார்கள் என்றும் பேசியிருந்தார்.

இது குறித்து விமர்சிக்கும் வகையில், எஸ்.வி சேகர் தனது ட்விட்டர் பதிவில், "லட்ச ரூபாயில் அடுத்தவன் காசில் வாழ்பவனை விட, ஆயிரம் ரூபாய் சொந்த காசில் வாழ்பவனே மானஸ்தன், நேர்மையானவன். தலைமைக்கு தகுதியானவன்" என்று பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். தொடர்ந்து சமயம் கிடக்கும் போதெல்லாம், மறைமுகமாக பதிவிட்டு வரும் எஸ்.வி சேகர், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அவர் அளித்த புகாரில் வெளிநாட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அண்ணாமலை குறித்து தொடர்ந்து எதிர் கருத்து வெளியிட்டு வருவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்தார்” என்று புகார் கொடுத்தார். தற்போது மீண்டும் இருவருக்கும் மோதல் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக 21 ஆதீனங்கள் தமிழகத்தை விட்டு வெளியே சென்றிருந்தார்கள்.இது ஒரு சரித்திர நிகழ்வு. நாசிக்கள் எந்த அளவுக்கு யூதர்களை வெறுத்தார்களோ அந்தளவுக்கு திராவிட கும்பல் பிராமண வெறுப்பை கடைப்பிடித்து வருகிறது. இதை நான் ஏஎன்ஐ செய்தி நிறுவன பேட்டியிலேயே தைரியமாக சொல்லியிருக்கிறேன்.

இதை சொல்ல எனக்கு எந்த வித அச்சமும் கிடையாது. பிராமணர்களை தேடித்தேடி வேட்டையாடினீர்கள், மிரட்டினீர்கள், அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தீர்கள். எத்தனையோ பேர் கடவுள் மீது பக்தியுடனும் மரியாதையுடனும் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் நல்லவர்களாக உள்ளனர். பிராமணர்களை வைத்து தமிழகத்தில் ஒரு பெரிய அரசியலே நடக்கிறது. இவை அனைத்தையும் உடைத்து நொறுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என பேசினார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட எஸ்.வி சேகர், "நாக்கில் தேனையும் நாடி நரம்புகளில் பிராமண எதிர்ப்பை கொண்டு, மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தால் பேசவைக்கைப்பட்ட ஓட்டு வங்கி" என்று கூறியுள்ளார். எஸ்.வி சேகர் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “தன்னை மாற்ற வேண்டுமென நினைப்பவர்கள் தாராளமாக டெல்லி செல்லட்டும். அதற்கான டிக்கெட் பணத்தை நானே தருகிறேன்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் பதில் அளித்துள்ளார். 

“அண்ணாமலையை மாற்றுவதற்கு டெல்லி வரை செல்ல வேண்டிய அவசியமில்லை. அவரைத் தூக்க வேண்டிய நேரம் வந்தால் நிச்சயம் அவர் தூக்கப்படுவார். நண்பர்களின் பணத்தில் வாழ்பவர் எனக்கு டிக்கெட் எடுத்துத் தர வேண்டிய அவசியமில்லை. புராணங்கள் எல்லாம் அவருக்கு தெரியாது. போலீஸ் துறையில் இருந்து வந்தவர். அதனால் தனக்கு கீழ் இருப்பவர்கள் சல்யூட் அடிக்க வேண்டுமென நினைக்கிறார். கட்சியை ஒழுங்காக நடத்தத் தெரியவில்லை.

ரவுடிகளையும், பைனான்ஸ் கம்பெனிகளை ஏமாற்றியவர்களை கூட வைத்து கொண்டால் கட்சி எப்படி வளரும். நிச்சயம் வளராது. தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய சமுதாயத்தில் இருந்து ஒரு தலைவர் கூட போடவில்லை. அண்ணாமலைக்கு என்ன தெரியும் என்று போட்டார்கள், அண்ணாமலைக்கும் சங்பரிவார்களுக்கும் என்ன சம்பந்தம், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என அவரிடம் சென்று அவரையும் ஏமாற்றிவிட்டு வந்தவர் அண்ணாமலை.

கர்நாடகாவில் இவர் செய்த உதவியால், அவர்களின் உதவியால் இவருக்கு அந்த பதவி கிடைத்துள்ளது. தன் வாழ்க்கையே தன் காசில் நடத்தாத ஒருவர், அடுத்தவருக்கு ஏர் டிக்கெட் வாங்கி தருகிறேன் என கூறுவது அவரிடம் திருட்டு பணம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். நான் என்னுடைய உழைப்பில் இருக்கிறேன். வாயைத் திறந்து தன்னைத்தானே முட்டாள் என அண்ணாமலை வெளிப்படுத்தக்கூடாது. கொஞ்சம் வாயைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

கட்சியில் இருந்த பிராமணர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அண்ணாமலை அவர்களுக்கு எதிரான மனநிலையில் உள்ளார். பிராமணர்களை அண்ணாமலை ஒதுக்கிறார் என்று நான் கூறியதைக் கேட்டுத்தான் டெல்லி அண்ணாமலைக்கு ஆப்படித்தார்கள். நண்பர்களின் பணத்தில் வாழ்கிறேன் என கூறும் இவருக்கு வெட்கமாக இல்லையா?

பஞ்சாங்கம் குறித்து அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியவில்லை. எந்த அளவிற்கு பிரமாணர்கள் மீது எதிர்ப்பு இருந்திருந்தால அவர் அதனைக் கூறியுள்ளார். அவருக்கு கட்சியை ஒழுங்காக நடத்தத் தெரியவில்லை. முதலில் அதனை செய்யட்டும். மேலும் என் தந்தை குறித்து பேச அவருக்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது” என்று மிகவும் காட்டமாக பதில் அளித்திருந்தார் எஸ்.வி சேகர்.

எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்த RSS-ன் முக்கியப்புள்ளி

இப்படி இவர்களுக்கான மோதலில், உண்மையான பிராமணன் மோடியும், அண்ணாமலையும் தான் என்றும், பூணூல் தெரிகிற மாதிரி வேண்டுமென்றே வெறுமனே சட்டை மாட்டிக்கொண்டு திரியும் எஸ்.வி.சேகர் உண்மையான பிராமணர்களின் பிரதிநிதி அல்ல என்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் என்பவர் பதிவிட்டிருப்பதை பாருங்கள்..  

"பிராமணன் என்பவன் என்னைப் பொறுத்தமட்டில் பிராமண ஜாதியில் பிறந்தவன் மட்டுமே அல்ல, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'. வேறு பல ஜாதிகளிலும் உண்மையான பிராமண கோட்பாடுகளுடன், உயர்ந்த தெய்வ சிந்தனை, பிறருக்கு உதவும் பாங்குடன், பிராமணத்துவம் கொண்ட பல பிராமணர்களை, பிரம்ம தேஜசுடன் உலவும் பலரை நான் கண்டிருக்கிறேன், என் நல்ல காலம்,  நண்பர்களாகவும் பெற்றிருக்கிறேன்.

பூணூல் தெரிகிற மாதிரி வேண்டுமென்றே வெறுமனே வெத்து போஸுக்காக சட்டை மாட்டிக்கொண்டு திரியும் நண்பர் எஸ்.வி.சேகர் சத்தியமாக உண்மையான பிராமணர்களின் பிரதிநிதி அல்ல. அண்ணாமலை பற்றிய அவரது கருத்துகளை சமீபத்தில் நெட்டில் பார்த்தேன். சேகர் மேல் பரிதாபமும் எரிச்சலுமே மிஞ்சியது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட OBC யில் பிறந்து உலகமே இன்று அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் மோடிஜியை விட ஒரு உண்மையான பிராமணன் உண்டா என்ன! அண்ணாமலையின் ஆழமான படிப்பு, புத்திசாலித்தனம், பேட்டிகளில் மரியாதை தவறாத பாங்கு, நக்கல், டைமிங் சென்ஸ், நேர் கொண்ட தேசியப் பார்வை, அரசியல் தெளிவு இவற்றில் எதுவுமே இல்லாத சேகர் அண்ணாமலை பற்றிப் பேசியது ஒரு சோகமயமான காமெடிப் பிதற்றல்.

என்னமோ தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு எல்லா பிராமணர்களும் நடப்பார்கள் என்றும் ஓட்டு போடுவார்கள் என்றும் சேகர் நம்புவது பரிதாபம். பிராமணர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. அவருடைய மேதாவித்தனம், எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தனம் தாங்கொணா எரிச்சலை ஊட்டுகிறது.

தமிழ்நாட்டு பிஜேபி திண்ணையில் காலங்காலமாக  துண்டு போட்டு இடம் பிடித்து வைத்துக்கொண்டு, சுய பிரலாபங்களுடன் லாவணிக் கச்சேரி பண்ணிக்கொண்டு இருந்த ஸோ கால்ட் பிராமணர்களை, சண்டிக் குதிரைகளை, சவுண்டி பிராமணர்களை, சரியாக இனங்கண்டு ஓட ஓட விரட்டி அடித்தது அண்ணாமலையின் மாஸ்டர் ஸ்ட்ரோக்"! என்று பதிவிட்டுள்ளார். இவருடைய பதிவின் மூலம் பிராமணர்களுக்குள்ளேயே இரண்டு அணியா? என்பதை சுட்டிக்காட்டுகிறது.