Tamil News
Tamil News
Monday, 12 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

எடப்பாடி  அண்ணாமலை மோதல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவிற்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டது. சி.டி.ஆர்.நிர்மல்குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததையடுத்து, அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி மீது கோவம் இருந்து வந்தது. இதைவைத்து அதிமுகவை பொதுவெளியில் வெளிப்படையாக விமர்சனம் செய்து வந்தார் அண்ணாமலை. இதையடுத்து, கூட்டணி பற்றி முடிவெடுப்பது நீங்கள் அல்ல, மேலே இருப்பவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலை கருத்துக்கு பதிலடி கொடுத்து வந்தார். 

எங்களுக்குள் எந்தவித மோதலும் இல்லை - இபிஎஸ்

இந்தநிலையில், கடந்த மாதம் டெல்லியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருசில அமைச்சர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே உள்ள கருத்து மோதலை தீர்த்து வைத்தார் அமித்ஷா. இதையடுத்து, அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்தவித மோதலும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

மறுபடியும் தொடங்கிய AIADMK Vs Annamalai

இந்தநிலையில், அதிமுக மற்றும் அண்ணாமலைக்குமான மோதல் மறுபடியும் தொடங்கி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அண்ணாமலை பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டியில் அண்ணாமலை தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சிகள் ஊழலில் ஈடுபட்டதாக பேசியிருந்தார். அப்போது, அதிமுக குறித்தும் பேசுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, பொதுமக்களின் பணத்தை முறைகேடு செய்த எந்த ஒரு கட்சியையும் நான் சொல்கிறேன். அது எல்லாக் கட்சிக்கும் பொருந்தும் என்றார். 

அதேபோல், 1991-96 வரையில் இருந்த அதிமுக ஆட்சி ஊழல் குறித்து மிகவும் விமர்சிக்கப்பட்டது. அதுபற்றிய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அண்ணாமலை, இங்கே இருக்கும் ஆட்சி எல்லாமே ஊழல் செய்யும் ஆட்சியாகத்தான் உள்ளது. முன்னாள் முதல்வரே ஊழல் காரணமாக தண்டிக்கப்பட்டு இருக்கிறார் என்று ஜெயலலிதா குறித்து விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.

இதையடுத்து, அதிமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். அண்ணாமலையின் கருத்துக்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு, பாஜக தரப்பிலும் அதிமுகவினருக்கு கண்டனம் தெரிவித்தனர். 

அண்ணாமலை பதிலடி

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், அதிமுகவினருக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் சொன்னதாவது, "எனது பேட்டியை சரிவர புரிந்துகொள்ளாமல் எனக்கு எதிராக கருத்துகளை முன்வைத்துள்ளனர். கூட்டணி கட்சியையும் கூட்டணி தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை. கூட்டணி தர்மத்தை எனக்கு யாரும் சொல்லித் தர வேண்டாம். கூட்டணி கட்சி விரும்புவதையெல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது" என்று தெரிவித்திருக்கிறார்.