Tamil News
Tamil News
Wednesday, 14 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடி

தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதிகளில் காவிரி நீரைக்கொண்டு நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஜீன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 220 நாட்களுக்கு, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம்.

வினாடிக்கு 10,000 கனஅடி நீர்

அந்த வகையில் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணை    கடந்த ஜூன் 12-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அணைக்கு நேற்று மாலை தண்ணீர் வரத்து விநாடிக்கு 892 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

காவிரியை வரவேற்ற விவசாயிகள் 

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று  அதிகாலை 3 மணியளவில் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையை வந்தடைந்தது. இந்த நிலையில், காவிரி நீர்,இன்று நள்ளிரவு 12 மணியளவில் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையிலிருந்து பாசனத்துக்காக நாளை (ஜூன் 16) தண்ணீர் திறக்கப்படுகிறது. முக்கொம்புக்கு தண்ணீர் வரத்து காலை 6 மணியளவில் விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்து வரும் நிலையில், காவிரி நீரை வரவேற்கும் விதமாக விவசாயிகள் ஒன்று திரண்டு படையல் வைத்து, தேங்காய் உடைத்து ,மலர் தூவி நெற்களை தூவி  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அரசுக்கு கோரிக்கை

மேலும், கடைமடைக்கு காவிரி நீர் சென்று அடையும் அளவிற்கு மீதமுள்ள தூர் வாரும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்றும் கல்லணையில் நீர் திறந்து விடுவது அரசு விழாவாக கடைபிடிப்பது போல்  காவிரி, கொள்ளிடம் பிரியும் முக்கொம்பிலும் தண்ணீரை திறப்பை அரசு விழாவாக கொண்டாட வேண்டியும் விவசாயிகள் வலியுறுத்தினர். திருச்சி மாவட்டத்தில் குறுவை சாகுபடி  10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முசிறி,லால்குடி  பகுதிகளில் மட்டுமே நடவு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும், தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரும் பணியை அரசு அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்தனர்.

பாகுபாடின்றி கடன் வழங்க வேண்டும் 

மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில்  பாகுபாடின்றி கடன் வழங்க வேண்டியும், விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில்,  கடந்த சில மாதங்களாக வரண்டு காணப்பட்ட காவிரியில் தற்போது தண்ணீர் பெருக்கெடுப்பதை பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முக்கொம்புக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.