Tamil News
Tamil News
Tuesday, 20 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குடியரசு தலைவர் மாளிகைக்கு கடந்த ஜனவரி மாதம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்று குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து எம்.பி.சு. வெங்கடேசனுக்கு பதில் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து, குடியரசு தலைவர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று உள்துறை அமைச்சகம் தகவல் உரிமை சட்டத்தில் பதில் அளித்துள்ள நிலையில், காணாமல் போவது கடிதமல்ல, நிர்வாக நேர்மை என குறிப்பிட்டு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

குடியரசுத் தலைவருக்கு கடிதம்

அவர் வெளிட்டுள்ள முகநூல் பதிவில்; "தமிழ்நாடு  மாநில பொதுப் பள்ளிக்கான மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அனுப்பிய கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து நான் மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு 19.01.2023 அன்று கடிதம் எழுதி இருந்தேன். அதில் 15 மாதங்களாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் மசோதா ஒப்புதல் தரப்படாமல் தாமதம் ஆவதையும், இதனால் லட்சக்கணக்கான தமிழ்நாடு பெற்றோர்கள், மாணவர்கள் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகி இருப்பதை சுட்டிக் காட்டி இருந்தேன். 

RTI-யில் அதிர்ச்சி
 

இதற்கு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது. அதில் எனது கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. பொதுப்பள்ளிக்கான மேடையின் பொதுச்செயலாளர் திரு. பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ள தகவல் உரிமைச் சட்ட பதில் (RTI reply) அதிர்ச்சி அளிக்கிறது.

கடிதம் கிடைக்கவில்லை
 
"24.12.2022 தேதியிட்ட கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து 19.01.2023 அன்று திரு வெங்கடேசன் அளித்த கடிதம் தங்களின் கடிதத்தில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து எங்கள் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டிருப்பது போல எங்களுக்கு அது வரப் பெறவில்லை." என்று உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

காணாமல் போவது கடிதமல்ல, நிர்வாக நேர்மை

இந்த நாட்டின் நிர்வாக தலைமையகமான குடியரசுத்தலைவர் மாளிகை நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதத்தை மேல்நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக சொல்கிறது. ஆனால் உள்துறை அமைச்சகமோ அப்படியொரு கடிதம் வரவில்லை என்று சொல்கிறது. தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான பிரச்சினையில் ஒன்றிய அரசுசார் நிர்வாகம் எவ்வளவு அலட்சியப்போக்கோடு நடந்து கொள்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம். 

மீண்டும் கடிதம்

காணாமல் போனது கடிதமல்ல, நிர்வாகத்தின் நேர்மை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்று மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். உடனடியாக தலையிட்டு 21 மாதங்களாக நிலுவையில் உள்ள நீட் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர ஆவன செய்யுமாறு வேண்டியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.