Tamil News
Tamil News
Sunday, 25 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் வகையில், மின்சார - நுகர்வோர் உரிமை விதிமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற மத்திய மாநில அரசுகளை ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட திமுக

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நிதி நிலைமையையும் மத்திய அரசின் விதிமுறைகளையும் நன்கு அறிந்து தான் 1000 யூனிட்டுக்கு குறைவான மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டிற்கு ரூ.6000 வரை பயன்பெறும் வகையில், மாதம் ஒரு முறை மின் கட்டணம் என வாக்குறுதி 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது திமுகவால் அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதி திமுகவால் காற்றில் பறக்கவிடப்பட்டு வீடு, வணிகம், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் 400 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டது. 

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான மறைமுக வழி

இந்த நிலையில், நேரத்திற்கு ஏற்ற கட்டணம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் ஆகியவை குறித்து மின்சார நுகர்வோர்விதி முறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தங்களில் பகல் நேர மின் பயன்பாட்டிற்கு 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை குறைவான மின் கட்டணம், இரவு நேர மின் பயன்பாட்டிற்கு 10 விழுக்காடும் முதல் 20 விழுக்காடு வரை அதிகமான மின் கட்டணம்  வசூலிக்கவும், ஸ்மார்ட் மீட்டர் பொறுத்திய பின்பு அபராதக கட்டணம் வசூலிக்கவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பகல் நேரங்களில் வீட்டில் உள்ள அனைவரும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று விடுவதால், மின் பயன்பாடு குறைவாக இருப்பதே வழக்கம். அதே சமயத்தின் இரவு நேரங்களில் வெளியில் செல்வோர் வீடுகளுக்கு திரும்பி விடுவதால், மின் பயன்பாடு அதிகரிக்கும். இந்த திருத்தம் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான மறைமுக வழி. 

திமுக மறைமுக ஆதரவு

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு விளக்கமளித்துள்ள தமிழ்நாடு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மத்திய அரசின் விதியால், தமிழகத்தில் வீட்டு நுகர்வோர், பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் இன்னும் முழுவதுமாக செயல்படுத்தப்படவில்லை என்பதால், நுகர்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது. இதை பார்க்கும்போது திமுக இந்த திருத்தத்திற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறதோ என நினைக்க தோன்றுகிறது. 

திருத்தங்களை திரும்ப பெற நடவடிக்கை 

எனவே இந்த திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், முளையிலேயே கிள்ளி எறி என்ற பழமொழிக்கேற்ப இதனை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கையினை திமுக அரசு எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். திருத்தங்களை திரும்ப பெறுவதற்கு தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு, திமுக அரசு கொடுத்து திருத்தங்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். என அந்த அறிக்கையின் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.