Tamil News
Tamil News
Sunday, 02 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

இஸ்லாமியர்களை நிற்க வைத்து பேசிய அமைச்சர்

பல்வேறு எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி ஒரு பக்கம் வரவேற்பையும் இன்னொரு பக்கம் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. மாமன்னன் படத்தில் சமூக நீதி அரசியல், தேர்தல் அரசியல் பற்றி உண்மை சம்பவததை குறியீடாக பயன்படுத்தி கதை அமைத்திருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்தநிலையில், மாமன்னன் திரைப்படத்தின் கதைக்கருவாக அமைந்த யார் நிற்பது யார் உட்காருவது என்று அமைக்கப்பட்ட கதைக்களத்தில் உண்மையில் இன்றும் அந்த வேறுபாடுகள் அரசியல் கட்சிகளிடத்தில் இருக்கிறது என்பதற்கு சான்றாக வேளாந்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இஸ்லாமியர்களை நிற்க வைத்து பேசிய மாதிரியான காட்சி இணையத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது. 

பா.ரஞ்சித் கேள்வி

இந்தநிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் மாமன்னன் திரைப்படத்தை பாராட்டி, இன்னமும் கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை எப்படி நிகழ்த்துகிறார்கள்?, இவர்களுக்கான அதிகாரம் என்னவாக இருக்கிறது?, அதற்கான காரணம் என்ன? என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

சமூக நீதி பேசுகிற கட்சி இருந்தும் ஊமையாக இருப்பதற்கான காரணம் என்ன? 

இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன? அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருந்தார். 

உதயநிதி ஸ்டாலின் பதில்

இதையடுத்து, மாமன்னனை பாராட்டிய பா.ரஞ்சிதிற்கு நன்றி தெர்வித்தும், சாதிய அடக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் எந்த கட்சியாக இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார். 

அறவே ஒழிக்கப்பட வேண்டும்

அவர் பதில் அளித்ததாவது, “மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.

சமூகநீதி'யை உயர்த்திப் பிடித்து வருகிறோம்

ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார். 'பராசக்தி'யில் தொடங்கி `மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.  

ஒரே படத்தால் மாறாது

ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும்  நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட. ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.