குடிபோதைக்கு அடிமையான மகன்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த தாட்கோ பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் -சாந்தாமணி தம்பதியினர். இவர்களது மகன் மணிகண்டன் 26. குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில், மணிகண்டனின் பெற்றோர் தினக்கூலிக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இதனிடையே குடிபோதையில் ரகளை ஈடுபட்டு வந்த மணிகண்டன் கடந்த ஒரு வாரமாக தாய் தந்தையை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டனின் பெற்றோர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
ரகளையில் ஈடுபட்ட மகனை கொன்ற தந்தை
இந்நிலையில் வழக்கம் போல் குடிபோதையில் வந்த மணிகண்டன் தனது தாய் மற்றும் தந்தையுடன் ரகளை ஈடுபட்டு போதையில் படுத்து உறங்கி உள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டனின் தந்தை செல்வராஜ் கட்டையால் அடித்து மணிகண்டனை கொலை செய்துள்ளார். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கொலையை மறைப்பதற்காக தனது மகனை யாரோ இரண்டு பேர் கொலை செய்து இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டின் முன் போட்டுவிட்டு சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தாய் - தந்தை கைது
இதை அடுத்து போலீசார் செல்வராஜை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது குடிபோதையில் தங்களை கொடுமைப்படுத்தி வந்த மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார.மேலும் மணிகண்டனின் தாய் சாந்தாமணியும் கொலைக்கு உடனடியாக இருந்ததால் போலீசார் மணிகண்டனின் தந்தை செல்வராஜ் மற்றும் தாய் சாந்தாமணி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் ரகளை செய்த மகனை பெற்றோரே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.