Tamil News
Tamil News
Friday, 11 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

திமுக மீது தாக்கு

அண்மையில் எதிர்கட்சிகள் பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இது தொடர்பாக நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சேலையை திமுகவினர் பிடித்து இழுத்ததாக கூரியிருந்தார். இது திமுகவினருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

தேர்தல் மேடையை போல்..

இது தொடர்பாக தனியார் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மு.க. ஸ்டாலின் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 'இந்துஸ்தான் டைம்ஸ்' ஆங்கில நாளேட்டிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்டது. மூன்று நாட்களாக பாஜக அரசு மீதும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அது எதற்கும் பதில் சொல்லவில்லை பிரதமர். மாறாக, தேர்தல் மேடைகளில் பேசுவதைப் போல காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிக் கொண்டு இருந்தார்.

அதிமுகவை எதிர்த்த மோடி

2014 தேர்தலுக்கு முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சி மீது என்ன குற்றச்சாட்டு வைத்தாரோ, அதே குற்றச்சாட்டை 9 ஆண்டுகளுக்குப் பிறகும் வைத்துக் கொண்டு இருந்தார். பாஜக அமைச்சர்கள் சிலரே கொட்டாவி விட்ட காட்சிகளை நேரலையில் பார்க்க முடிந்தது. பிரதமர் உரையை யாராவது எடுத்து முழுமையாகப் படித்தால், இது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து 'எதிர்க்கட்சித் தலைவர்' மோடி பேசுவதைப் போல இருக்கும். பாஜக ஆட்சியை ஒரு வாக்கில் கவிழ்த்த கட்சி அதிமுக. அந்தக் கட்சிக்கு எதிராகத் தான் 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்கு கேட்டார் மோடி. இப்போது அதிமுகவை அருகில் வைத்திருப்பதை விட சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா? 

ஜெயலலிதாவுக்கு அப்படி நடக்கவில்லை

நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு அவர்கள் சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது. எனவே தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது, அவையைத் தவறாக வழிநடத்துவது" என்று கூறியுள்ளார்.