Tamil News
Tamil News
Sunday, 24 Sep 2023 12:30 pm
Tamil News

Tamil News

கடந்த சில நாட்களாகவே அதிமுக - பாஜக இடையிலான மோதல் என்பது தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாஜக கூட்டணியில் அதிமுக நீடிக்குமா நீடிக்காதா என்ற வினா நீண்டுகொண்டே இருந்தது. இந்தநிலையில், பாஜகவிலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக்கொள்வதாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.      

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அதிமுக மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது. 

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் தலைமை, கடந்த 20.08.23 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று மாலை செப்-25 திங்கள்கிழமை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது".