நடிகர் ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் ரீ – ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் டப்பிங் பேசியுள்ளார்.
பாட்ஷா, வீரா, அண்ணாமலை உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கியப் படம் தான் பாபா. இந்த திரைப்படம் கடந்த 2002 ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. பாபா படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் படத்தையும் தயாரித்திருந்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில், பாபா திரைப்படம் மீண்டும் வெளியாகும் என ஏற்கனவே படகுழு அறிவித்திருந்தது.
பாபா படம் மீண்டும் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வார காலமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று ஒரே ஒரு காட்சியாக பாபா படத்தை திரையிட திட்டமிட்ட குழுவினர் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் எதிர்பார்ப்பினை கண்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் வெளியிட தீவிரமாக யோசித்து வருகின்றனர்.
படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் முன்னோட்டத்தை தான் முதலில் பார்வையிடுவதற்கு கோரிக்கை வைத்துள்ளார். இதன் மூலம், தன்னால் படத்தின் இசையினை மேலும் மேம்படுத்த இயலுமா? என்பதனை அவர் பார்வையிட உள்ளார். இதுதவிர, DI,மிக்ஸிங் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ரஜினிகாந்த் புதிய காட்சிகளுக்கு டப்பிங் பேசியிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.