ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட விவகாரத்தில் ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே செய்கிறார் என அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் புதிய மேம்பால கட்டுமானப் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பொன்னையில் நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகள் உடனான் ஆலோசனைக் கூட்டத்திலும் அமைச்சர் கலந்துக் கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட விவகாரத்தில் ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே செய்கிறார்" என குற்றஞ்சாட்டினார்.
அதாவது, "தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைகுறித்த அவசர சட்டம் நேற்றுடன் காலாவதியாகி உள்ளது. தற்போது சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்காவது ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம்.
ஒருவேளை, ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை எனில், அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது பிறகு தெரியும். தமிழக ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே செய்கிறார்" என அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டி உள்ளார்.