குஜராத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குமுன்னதாக பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் காங்கிரஸில் இணைந்துள்ளதால் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வருகின்ற டிச.,1-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆளும் மாநிலமான குஜராத் 182 இடங்களை கொண்ட சட்டசபையாகும். இங்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடப்பதால் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. நாளையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
இந்நிலையில், எதற்கெடுத்தாலும் குஜராத் மாடல் என்று சிலாய்க்கித்துக் கொள்ளும் பாஜகவிற்கு, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஷாக் கொடுத்துள்ளார்.
அதாவது, பாஜகவில் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி ராஜினாமா செய்த குஜராத் முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் இன்று(நவ.,28) காங்கிரஸில் இணைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது குஜராத்தில் பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் வியாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இன்று அகமதாபாத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் காங்கிரஸில் இணைந்திருப்பது பாஜகவுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.