ஆளுநர் பதவி என்பதே காலாவதியான விஷயம் என்று கனிமொழி எம்.பி., கூறியிருப்பது எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைத்த வானவில் மன்றத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன்பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆன்லைன் சூதாட்டம் குறித்து பேசிய கனிமொழி எம்.பி., “தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதியாகி உள்ளது. ஆளுநர் பதவி என்பதே காலாவதியான விஷயம். ஆளுநர் பதவி இல்லையென்றால் இந்நேரம் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்திருக்க முடியும். ஆளுநர் பதவி தேவையில்லாத ஒன்று. அந்த பதவி இல்லாமல் போனாலே பல சிக்கல்கள் தீர்ந்து விடும். எதற்காக ஆன்லைன் சூதாட்டத்தை பாதுகாக்க துடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை” என்று கூறினார்.
ஆளுநருக்கு எதிரான கனிமொழி எம்.பி.,யின் கருத்தானது எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.