Tamil News
Tamil News
Saturday, 17 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

4 நாளில் நிதானமாக ஆடி ரன்களை குவித்துள்ள வங்கதேசத்தின் வெற்றிக்கு  இன்னும் 241 ரன்கள் தேவை - கைவசத்தில் 4 விக்கெட்டுகள் 

பந்து வீச்சில் அசத்தும் இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சாட்டிங்காம் மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்காளதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

வங்கதேசத்திற்கு இமாலய வெற்றி இலக்கு 

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த இன்னிங்ஸில் கில் மற்றும் புஜாரா சதமடித்து அசத்தினர். இதனால் வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் விளையாடிய வங்கதேசம் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்தது. 

நிதானமாக ரன்களை குவித்த வங்கதேசம்

இந்நிலையில், 4 வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடக்கம் முதலே வஙதேச அணி நிதானமாக ஆடி ரன்களை குவித்து வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹொசைன் சாண்டோ,ஜாகிர் ஹசன் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தொடக்க விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் 67 ரன்களில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ வெளியேறினார். பின்னர் வந்த யாசிர் அலி 5 ரன்களிலும் , லிட்டன் தாஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஜாகிர் ஹசன் சதமடித்து அணியின் ரன் சேர்க்கைக்கு உதவினார். பின்னர் அவரும் 100 ரன்களில் வெளியேற அவரைத் தொடர்ந்து விளையாடிய முஷ்பிகுர் ரஹிம் 23 ரன்களும் , நுருல் ஹசன் 3ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

வெற்றி வாய்ப்பில் இந்திய அணி

4வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் அக்சார் படேல் 3 விக்கெட்டும் . உமேஷ் யாதவ் , அஸ்வின் , குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஷாகிப் 40 ரன்களும் , மெஹிதி ஹசன் 9 ரன்களும் எடுத்து களத்தில் உள்ள நிலையில், வங்காளதேச அணி வெற்றி பெற இன்னும் 241 ரன்கள் தேவைப்படுகிறது.

அதேசமயம் இந்திய அணிக்கு இன்னும் 4 விக்கெட் மட்டுமே தேவைப்படுவதால்,  இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில், 5 வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடங்குகிறது.