Tamil News
Tamil News
Thursday, 05 Jan 2023 11:30 am
Tamil News

Tamil News

தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வலியுறுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சுக்கு சர்ச்சை வலுத்துள்ள நிலையில், அவரது பேச்சின் உண்மையான உள்ளடக்கத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

ஆளுநர் சர்ச்சை பேச்சு

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மத்திய அரசு சார்பாக ’காசி தமிழ் சங்கமம்’ சுமார் 1 மாத காலம் நடந்தப்பட்டது. இந்நிலையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த ஜன 4ம் தேதி நடைபெற்றது. 

அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியா என்பது ஒரே நாடு. ஆனால் சிலர் அமெரிக்காவை போல பல தேசங்கள் இணைந்த நாடாக கருதுகின்றனர். அது தவறு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணர்கின்றனர். ’தமிழ்நாடு’ என்று சொல்வதை விட ’தமிழகம்’ என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

டிரெண்டிங்கில் ‘தமிழ்நாடு’

தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது டிவிட்டர் தளத்தில் பெரிய சர்ச்சையாகி உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்திய அளவில்  'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தமிழ்நாடு என்ற பெயரைப் பயன்படுத்தவேண்டும் என்றும், இந்தியாவின் ஓர் அங்கம்தான் தமிழ்நாடு என்றும் ட்வீட்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒருசிலர் ஆளுநரின் கருத்துக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இது குறித்துப் பதிவிட்டு வருகின்றனர்.

ஆளுநர் விளக்கம்

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஆளுநர் மாளிகை இதுகுறித்து அளித்துள்ளது. 

அதில், ”பிரதமர் மோடி நமது நாட்டை “பாரதம்” என்ற கண்ணோட்டத்தில், “ஒரே குடும்பமாக” பார்க்கிறார். ஆனால் இந்த யதார்த்தம் காலனித்துவ காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட புகைமூட்டத்தால் மறைக்கப்பட்டுள்ளது ”என்று ஆளுநர் கூறியுள்ளார்.

திராவிட பிற்போக்கு அரசியல்

”அதற்கேற்பவே தமிழகத்தில் “நாங்கள் திராவிடர்கள்” என்ற பிற்போக்கு அரசியல் இருந்து வருகிறது. அதனுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை; நாம் அரசியலமைப்பால் ஒன்றிணைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே செயலாற்றுகிறோம்.  ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ‘நாங்கள் ஒருங்கிணைந்த தேசத்தின் அங்கம் இல்லை’ என்று வலுவான ஒரு கதையை சொல்லி வருகிறார்கள். அதனாலேயே நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடிய அனைத்தையும், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ‘இல்லை, எங்களுக்கு வேண்டாம்’ என்று சொல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது” என்று ஆளுநர் கூறியுள்ளார்.

மேலும், “இதற்கு மாறாக நாம் அனைவரும் ஒன்று. பாரதத்தின் ஒரு பகுதி தமிழ்நாடு. அதற்கேற்ப தமிழகம் என்று நாம் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. காரணம், இந்த நிலம் பாரதத்தின் ஆன்மாவை, பாரதத்தின் அடையாளத்தை பராமரிக்கிறது. 

வெளிநாட்டினர் ஏற்படுத்திய பல அழிவுகளையும் மீறி பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் ஒற்றுமை பராமரிக்கப்பட்டு வருகிறது. முழு பாரதத்தையும் நிலைநிறுத்தி அதற்குப் புத்துயிர் தருவது இந்த நம்பிக்கை தான் ; இப்போது இதை சிலர் பொய்யாக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது” என்று ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.