Tamil News
Tamil News
Monday, 09 Jan 2023 00:00 am
Tamil News

Tamil News

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் சமூகநீதி தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு போன்ற வார்த்தைகளை தவிர்த்ததோடு, தேசிய கீதத்தையும் புறக்கணித்துள்ளது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என கடந்த மாதம் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள ஆளுநருக்கு நேரில் சென்று அழைப்புக்கொடுத்தார். இதன்படி இன்று (09-01-2023) காலை பத்து மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே பொறுத்தமாக இருக்கும் என்றும், தமிநாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடம் என்னும் பிற்போக்கு கொள்கை வேரூன்றி உள்ளது எனவும் பேசினார். இதற்கு பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆளுநர் ரவி, ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்பட்டு வருகின்றார் என்றும், இந்துவக் கொள்கைகளை தமிழ்நாட்டில் புகுத்த முயற்சிக்கிறார் என விமர்சித்தனர். 

இந்நிலையில் இன்று கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரை கண்டித்து, காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர். மேலும் எங்கள் நாடு தமிழ்நாடு, ஆளுநரை நீக்குக போன்ற கோசங்களையும் திமுகவின் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் எழுப்பினர். 

தமிழ்நாடு என்ற வார்த்தையை புறக்கணித்த ஆளுநர்

இந்நிலையில், இன்று நடந்த கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு, திராவிடமாடல் போன்ற வார்த்தைகளை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு உரையாற்றினார்.

 முதலமைச்சர் தீர்மானம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரையின் மீதான தீர்மானத்தினை முன்மொழிந்து சட்டமன்றப் பேரவையில் உரையாற்றினார். அதில், ”ஆளுநருக்கு வரைவு உரையானது தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும் தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.

நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.

பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநர் அவர்களுக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம் ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல. அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்

ஆகவே சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி இன்றைக்கு அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் அவர்கள் இணைத்து விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.

அப்போது ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்தநிலையில் அவரை கண்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியதால் தேசிய கீதம் போடுவதற்கு முன்னர் ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார்.