Tamil News
Tamil News
Tuesday, 10 Jan 2023 00:00 am
Tamil News

Tamil News

சட்டப்பேரவையிலிருந்து ஆளுநரையே ஓடவிட்டவர் நமது முதலமைச்சர் ஸ்டாலின் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் சர்ச்சை

தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று (09-01-2023) காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது திமுகவின் கூட்டணிக் கட்சிகளான, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழர் வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் ஆளுநர் உரை தொடங்கியவுடன் ஆளுநருக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். 

ஏனென்றால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே பொறுத்தமாக இருக்கும் என்றும், தமிநாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடம் என்னும் பிற்போக்கு கொள்கை வேரூன்றி உள்ளது எனவும் பேசினார். இதற்கு பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆளுநர் ரவி, ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்பட்டு வருகின்றார் என்றும், இந்துவக் கொள்கைகளை தமிழ்நாட்டில் புகுத்த முயற்சிக்கிறார் விமர்சித்தனர். 

மேலும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக, ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்து பதாகைகளை ஏந்தி ஆர்.என்.ரவிக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.  

ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களிலும் அரசியல் பேசி, பாஜக தலைவரைப் போல செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டிய காங்கிரஸ், தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த இன்றைய ஆளுநர் உரையில் தமிழ்நாடு, திராவிடமாடல் போன்ற வார்த்தைகளை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு ஆர்.என்.ரவி உரையாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

தமிழ்நாடு பெயரை புறக்கணித்த ஆளுநர்

இந்நிலையில் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாடு, தமிழ்நாடு அரசு, அம்பேத்கர், காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், பெண்ணுரிமை, சமத்துவம், தமிழ்நாடு அமைதிப் பூங்கா போன்ற வார்த்தைகளையும் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்துள்ளார். மேலும் அவரது விருப்பப்படி சில வரிகளை இணைத்து பேசியுள்ளார். 

முதலமைச்சர் கண்டனம் 

இதனால் ஆளுநர் உரை முடிந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரிடம் முன்னதாகவே ஒப்புதல் பெறப்பட்டு, அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே சட்டமன்ற குறிப்பில் இடம்பெறும் எனவும், ஆளுநர் தன்னிச்சையாக சேர்த்துக்கொண்ட வரிகளும், வார்த்தைகளும் இடம்பெறாது எனவும் கூறி தீர்மானம் நிறைவேற்றினார். 

வெளிநடப்பு செய்த ஆளுநர்

ஆளுநர் சட்டப்பேரவையில் இருக்கும்போதே, அவருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்ததால், தேசியக் கீதம் இசைக்கப்படும் முன்னரே சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தால் ஆர்.என்.ரவி. 

உதயநிதி ஸ்டாலின் உரை

திமுகவின் சென்னை தெற்கு மாவட்டம் சார்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நேற்று மாலை கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பொதுவாக சட்டமன்றத்தில் நமது முதலமைச்சர் ஏதாவது புதிய அறிவிப்பு வெளியிட்டாலோ அல்லது புதிய திட்டங்களை அறிவித்தாலோ அதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள், ஆனால் சட்டமன்ர வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் வெளிநடப்பு செய்திருக்கிறார். ஆளுநரையே ஓடவிட்டார் முதலமைச்சஎ ஸ்டாலின்” என பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.