Tamil News
Tamil News
Wednesday, 11 Jan 2023 11:30 am
Tamil News

Tamil News

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார்.  

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 09 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது திமுகவின் கூட்டணிக் கட்சிகளான, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழர் வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் ஆளுநர் உரை தொடங்கியவுடன் ஆளுநருக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். 

ஏனென்றால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே பொறுத்தமாக இருக்கும் என்றும், தமிநாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடம் என்னும் பிற்போக்கு கொள்கை வேரூன்றி உள்ளது எனவும் பேசினார். இதற்கு பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆளுநர் ரவி, ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்பட்டு வருகின்றார் என்றும், இந்துவக் கொள்கைகளை தமிழ்நாட்டில் புகுத்த முயற்சிக்கிறார் விமர்சித்தனர். 

மேலும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக, ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்து பதாகைகளை ஏந்தி ஆர்.என்.ரவிக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.  

ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களிலும் அரசியல் பேசி, பாஜக தலைவரைப் போல செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டிய காங்கிரஸ், தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த இன்றைய ஆளுநர் உரையில் தமிழ்நாடு, திராவிடமாடல் போன்ற வார்த்தைகளை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு ஆர்.என்.ரவி உரையாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

சேது சமுத்திர திட்டம்

தொடர்ந்து கடந்த 3 நாட்களாகவே கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று(ஜன 12) கூடிய நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார்.  

இதுகுறித்து அவர் கூறுகையில், “ 150 ஆண்டுகால கனவு திட்டம் சேது சமுத்திர திட்டம் அத்திட்டத்தின் தீர்மானத்தை பேரவையில் முன்மொழிவதை வரலாற்று கடமையாக கருதுகிறேன். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது. 1860ம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் கமாண்டர் டைலர்  என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. 

அதன்பிறகு 1955-ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் குழு, 1963-இல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திரசிங் ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக்குழு ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டம் ஆகும். இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. 

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் "Feasibility Study"-க்கு அனுமதியளித்தார்கள். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான மன்மோகன்சிங்கால் 2004ம் ஆண்டு ரூ.2,427 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி முன்னிலை வகிக்க இத்திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் 2.7.2005 அன்று துவக்கி வைத்தார்கள். திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களை செழிக்க வைக்கும் இத்திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.

பிரதமர் மோடி எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ அதையே நிராகரிக்கும் வகையில் தற்போது "ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்" என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இப்படி மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திரத்திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது. இனியும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது” என கூறி தனது உரையை நிறைவு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்