தேசிய கல்விக்கொள்கை 2020 பரிந்துரையின் அடிப்படையில் பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையிலும், அடிப்படை கல்வியை பலப்படுத்தும் வகையிலும், பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான செயல்முறைகளை மத்திய அரசு வகுத்து வருகிறது. இந்த நிலையில்தான் மத்திய அரசு மாநில அரசிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது; அடிப்படை கல்வி அதாவது ப்ரீ ப்ரைமரி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி என்று அடிப்படை கல்வி என்பது மூன்று ஆண்டுகள் அங்கிருந்து ஆரம்பிக்கப்படும். அதற்காக மூன்று வயதிலிருந்து ப்ரீ ப்ரைமரியில் மாணவர்களை சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சிபிஎஸ்இ கல்விக் கொள்கையை பொறுத்தவரையில் 6 வயதுடைய மாணவர்கள் தான் ஒன்றாம் வகுப்பிற்கு பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அதேவேளையில் மாநிலவழி கல்வியை பொறுத்தவரைக்கும், ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கு 5 வயதிலிருந்தே எடுத்துக்கொள்கிறார்கள். எனவே இந்த வயது வரம்பை அதிகரிக்க வேண்டும். மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுவதற்காகவும், மேலும் அவர்களின் அடிப்படைக் கல்வியை வலுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வயதில் ப்ரீ ப்ரைமரி வகுப்பில் சேர்க்கலாம். மூன்று ஆண்டுகள் ப்ரீ ப்ரைமரி வகுப்பில் பயில வேண்டும். முதல் வகுப்பில் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது 6 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்றும் அதற்கான வழிமுறையை கடைபிடிக்கும்படி, மத்திய அரசானது மாநில அரசுகளுக்கு இந்த அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.