Tamil News
Tamil News
Thursday, 23 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை ஆர்.என்.ரவி சிதைத்துக் கொண்டு இருப்பதாக திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது.  இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் பிறந்த ஆர்.என்.ரவியை விட, இந்தியாவில் பிறக்காத கார்ல் மார்க்ஸுக்கு இந்தியாவைப் பற்றி நன்கு தெரியும். ஏனென்றால் மனித மனத்துக்கு அடிப்படையான அறம், மார்க்ஸ் மனதில் இருந்தது. அதனால் இந்தியாவை நன்கு புரிந்து கொண்டார். 200 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்ஸ் புரிந்து கொண்டார்.

“கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூகக் கோட்பாடுகளைச் சிதைக்க வேண்டும் என்று கட்டுரை எழுதி இருக்கிறார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவைச் சிதைத்தது. இதனால் இன்று மார்க்சின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது” – என்று கிண்டி ‘ராஜ்பவனை’ ஆர்.எஸ்.எஸ். இன்ஸ்டிடியூட் ஆக ஆக்கிக் கொண்டிருக்கும் ஆளுநர் ரவி சொல்கிறார். இந்தியாவின் சமூகக் கோட்பாடு என்ன என்பதைச் சொன்னால், எதனைச் சிதைத்தார் மார்க்ஸ் என விளக்கம் அளிக்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வெளியிடும் துண்டுப் பிரசுரங்களின் பின்னட்டைக் குறிப்புகளை வைத்துக் கொண்டு நித்தமும் ஏதேதோ பேசி வருகிறார் ஆளுநர். இவருக்கு இந்தியாவைப் பற்றியும் தெரியவில்லை, மார்க்ஸைப் பற்றியும் தெரியவில்லை. இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எழுதிய குறிப்புகளை முழுமையாக அறிந்திருந்தால் அவர் இப்படிப் பேசி இருக்க மாட்டார்.

சாதி அடிப்படையிலான உழைப்புப் பிரிவினை இருப்பதன் காரணமாக இந்திய கிராமங்கள் கட்டமைப்பு ரீதியாக ஜனநாயகத் தன்மை கொண்டவை அல்ல என்றும் மார்க்ஸ் கணித்தார். இன்றைக்கும் இந்தியக் கிராமங்கள் சாதிய மேலாண்மை கொண்டவைகளாகவே இருக்கின்றன. அங்கு ஜனநாயகம் என்பது ஜாதிநாயகமாகத்தான் இருக்கிறது.இதனைக் கண்டித்துதான் மார்க்ஸ் எழுதி இருக்கிறாரே தவிர, வேறல்ல. ஆர்.என்.ரவி சொல்லும் இந்திய சமூகக் கோட்பாடு என்பது சாதியக் கோட்பாடாக இருப்பதால் அதனை கண்டிக்கிறார் மார்க்ஸ். 

"இந்திய கிராம சமூக அமைப்பு என்பது சாதி வேற்றுமையாலும், அடிமை முறையினாலும் கெட்டிருந்தன என்பதையும், மனிதனை புறநிலைமைகளுக்கு எஜமானன் ஆக்குவதற்குப் பதிலாக அவனை சாதிக்கு அடிமை ஆக்கின" என்று எழுதியவர் மார்க்ஸ், இதில் என்ன தவறு இருக்க முடியும்.?

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்து, தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களைச் சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி என்பதுதான் உண்மை. இவரது சிந்தனை தமிழ்நாட்டைச் சிதைக்க முயற்சிக்கிறது. இதனை தமிழ்நாட்டு மக்கள் பொருட்படுத்துவதே இல்லை என்பதுதான் பேருண்மை.