Tamil News
Tamil News
Friday, 24 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

குரூப் 2 முதன்மைத் தேர்வில் குழப்பம்

தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான முதன்மை தேர்வு நடைபெற்று வருகிறது. 5,446 பணியிடங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்வுக்கு சுமார் 186 இடங்களில் இருக்கக்கூடிய 280 தேர்வு மையங்களில் 51,071 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 32 தேர்வு மையங்களில் 8,315 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த நிலையில் சென்னையில் துரைப்பாக்கம், புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட சில தேர்வு மையங்களில் 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு சில குளறுபடிகளால் தாமதமாக தொடங்கியது.

டிஎன்பிஎஸ்சி விளக்கம்

இதுகுறித்து டின்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாளில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக வினாத்தாள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. அது சரி செய்யப்பட்டு, தேர்வு அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டது. இந்த கால தாமதத்தை ஈடு செய்யும் வகையில் மதியம் நடைபெறும் 2ஆம் தாள் தேர்வு 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

புதிதாக தேர்வு நடத்த வேண்டும்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் குளறுபடி என்ற செய்தி 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் தேர்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும்  டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மை தேர்வில் சென்னை, திருச்சி உள்ளிட்ட தேர்வு மையங்களில் பதிவெண் குளறுபடியால் தேர்வு தாமதமாக தொடங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

https://twitter.com/TTVDhinakaran/status/1629378893806460930?s=20

தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அலட்சியமாக செயல்பட்டதே குளறுபடிக்கு காரணம் என தேர்வர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை எனும் எதிர்காலம் பாதிக்கப்படாதவாறு இப்போதைய குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு குளறுபடி இன்றி புதிய தேர்வு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

குரூப் 2 தேர்வை வேறொரு நாளில் நடத்திட வேண்டும்

இன்றைய தேர்வை ரத்து செய்துவிட்டு வேறொரு நாளில் நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும். பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. 

https://twitter.com/draramadoss/status/1629366876135645184?s=20

டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே இதற்குக் காரணம். போட்டித்தேர்வுகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை. சமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது. எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்துசெய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு, வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இத்தேர்வை டி.என்.பி.எஸ்.சி மீண்டும் நடத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.