Tamil News
Tamil News
Monday, 27 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

தரங்கம்பாடியை சேர்ந்த 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சில நாட்களுக்கு முன்பு கடும் தாக்குதல் நடத்தினர். இரும்பு ரோப் கொண்டு தாக்கி உள் காயம் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் படகில் இருந்த  இன்ஜின், ஜிபிஎஸ், தூண்டில், பேட்டரி ஆகியவற்றை எடுத்து சென்றனர். காயமடைந்த மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மீனவர்களை எல்லை கடந்து இலங்கை ராணுவம் தாக்கியதாக குற்றம்சாட்டிய மே 17 இயக்கம் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று இலங்கை தூதரகம் அருகே திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாங்கள் மிகப்பெரிய ராணுவத்தை வைத்திருக்கிறோம், நாங்கள் தேச பக்தர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கக்கூடிய மோடி அரசு, இலங்கை அரசை கேள்வி கேட்பதற்கு வக்கு இல்லையா என்று நாங்கள் கேட்கிறோம். தமிழ்நாட்டின் தேச பக்தர்கள் என்று சொல்லுகின்ற இந்த சங்கிகள், இலங்கை நாட்டின் மீது பொருளாதார தடை போடுவதற்கு ஏன் தயங்குகிறார்கள். இலங்கை அரசை மோடி அரசு ஏன் தடுக்க மறுக்கிறது என்ற கேள்வியை கேட்க நாங்கள் விரும்புகின்றோம். பாரதீய ஜனதா கட்சியினுடைய தமிழர் விரோத அரசியலைத்தான் இப்போது நாங்கள் அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறோம். 

தமிழ்நாட்டில் போராட்டம் நடத்த வேண்டிய தேவை என்னவென்றுகேட்டால், இலங்கை அரசும் இந்திய அரசும் கூட்டு சேர்ந்து தமிழ்நாடு மீனவர்களை படுகொலை செய்கிறார்கள். இதற்கு மோடி அரசு உடந்தை என்று குற்றம் சாட்டுகிறோம். அண்ணாமலையினுடைய ஒப்புதலில்தான் தமிழ்நாட்டு மீனவன் அடித்து துன்பப்படுத்தப்படுகின்றான். அண்ணாமலை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கை சந்தித்து வந்த இரண்டு நாட்களிலேயே, தமிழ்நாட்டு மீனவன் தாக்கப்படுகிறான் என்றால், அவர் யாருக்காக வேலை செய்கிறார், அண்ணாமலை யாருடைய கைகூலியாக இருந்து வருகிறார் என்று காட்டமான கேள்வியை முன்வைத்தார்.

மேலும், தமிழ்நாட்டு மீனவனை அடிப்பதற்கு, கேள்வி கேட்பதற்கு, அவனை சித்ரவதை செய்வதற்கு பாரதீய ஜனதா கட்சியும், அண்ணாமலையும் துணை செய்திருக்கிறார்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையினரால் கொல்லப்பட்ட மீனவன் ராஜ்கிரண் இந்துதானே. அவர் கொல்லப்பட்டபோது இந்துக்கள் எல்லாம் எங்கே சென்றீர்கள். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஆதரவாக கேள்வி கேட்பதற்கு நாதியற்ற பினம் என்று நினைத்தீர்களா.. சங்கிகளே நாட்டை விட்டு வெளியே போ என்று ஆவேசமாக பேசியுள்ளார். 

சூரிய ஒளி திட்டத்திற்கு ஒப்புதல் வாங்குவதற்காக அண்ணாமலையும், எல். முருகனும் சென்றிருக்கிறார்கள். இதற்காகத்தான் ரணில் விக்ரமசிங்கை சந்தித்து இருக்கிறார்கள். அதானிக்கு ஒப்பந்தம் கொடுத்துவிட்டோம் என்பதற்காக தமிழக மீனவனை அடிக்கிறார்கள். இதேபோல், கொழும்புவில் உள்ள கிழக்கு துறைமுகத்தை அதானிக்கு கொடுக்க வேண்டும் என்று ஜெய்சங்கர் சென்றவுடன், இந்திய அரசு பேசியவுடன் ராஜ்கிரண் படுகொலை செய்யப்படுகிறார். ஜெய்சங்கர் இலங்கை சென்று சந்தித்த அடுத்த நாள் கோட்டைப்பட்டினம் மீனவன் படுகொலை செய்யப்படுகிறான். அண்ணாமலை சென்றுவந்த இரண்டு நாளில் தமிழ்நாட்டு மீனவன் சித்ரவதை செய்யப்படுகிறான். 

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஆதரவாக, சங்கிகளுக்கு எதிராக கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லை என்பதாலேயே, இந்த சங்கிகளை அம்பலபடுத்துகின்ற நாங்கள் வீதிக்கு வந்திருக்கிறோம். தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி இலங்கை அரசோடு கை கோர்த்துக்கொண்டு தமிழர்களை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும். உங்களுடைய ஒப்புதலில்தான் தமிழ்நாட்டு மீனவன் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதற்கு முழுக்க காரணம் தமிழ்நாட்டு பாஜகவும் மோடியின் கையாளாகாத்தனமும் தான். இப்படிப்பட்ட சூழலில் தான் இலங்கை அரசை நோக்கி இந்த முற்றுகைப் போராட்டம் என்று அவர் தெரிவித்தார்.