Tamil News
Tamil News
Saturday, 11 Mar 2023 00:00 am
Tamil News

Tamil News

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது. ஆனால் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.

கைது

என்.எல்.சி நிறுவனம் வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் தோண்டி எல்லை வரையறை செய்தனர். மேலும் விவசாய நிலத்தை நவீன எந்திரங்கள் உதவியுடன் சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் பாமக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக-வினர் கைது செய்யப்பட்டனர்.

கடையடைப்பு

இதையடுத்து, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு பாமக நிறுவன தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதனடிப்படையில், கடலூரில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இன்று கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் என்.எல்.சி நிறுனவத்தை எதிர்த்து முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதை நான் மகிழ்ச்சியோடு சொல்லவில்லை. மக்களை அவதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. தமிழக மக்களுக்கு கடலூரில் நடக்கக்கூடிய அவலங்களைப் பற்றி விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த முழு கடையடைப்பு போராட்டத்தை நேற்று அறிவித்தோம். 

ஸ்டெர்லைட் ஆலையை விட நூறு மடங்கு ஆபத்து

இது என்.எல்.சி சார்ந்த பிரச்னை மட்டும் கிடையாது. ஒரு சில கட்சிகள் புரிதல் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது நெய்வேலியைச் சுற்றியுள்ள பத்து பதினைந்து கிராமங்களைச் சுற்றியுள்ள பிரச்னை கிடையாது.இது கடலூர் மாவட்ட பிரச்னை, விழுப்புரம் மாவட்ட பிரச்னை, கள்ளக்குறிச்சி மாவட்ட பிரச்னை, அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட பிரச்னை இது என்று பேசினார். 

மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விட, நூறு மடங்கு அதிகம் உள்ள பிரச்னையாக என்.எல்.சி இருக்கிறது. இதை புரிந்து கொள்ளாமல் தமிழக அரசு அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

தமிழ்நாடு அரசு ஒருபக்கம் விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் போடுகிறார்கள்... மறுபக்கம் விவசாயிகளை அச்சுறுத்தி துன்புறுத்தி காவல்துறையை வைத்து நிலங்களை பிடுங்கி அதை என்.எல்.சி. நிர்வாகத்திடம் ஒப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுக்கலாம்

தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கு எதிரான போக்கை கண்டிக்கின்றோம். என்.எல்.சி நிறுவனம் அமைப்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் பாமக தொடர்ந்து போராடி வருகிறது. என்.எல்.சி வருவதற்கு முன் 8 அடியில் இருந்த நிலத்தடி நீர் தற்போது 1,000 அடிக்கு சென்றுவிட்டது. இதற்கு முழு காரணம் என்.எல்.சி. 10 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்று என்.எல்.சி.யிடம் உள்ளது. அந்த 10 ஆயிரம் ஏக்கர் நிலத்திலே இன்று பழுப்பு நிலக்கரியை எடுத்தால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுக்கலாம்.

மத்திய அரசு என்.எல்.சி நிர்வாகத்தை தனியாரிடம் விற்கப்போகிறோம் என்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தில் பேசினால் அது நூறு சதவிகிதம் உண்மையாகத்தான் இருக்கும். அடுத்த ஆண்டிற்குள் என்.எல்.சி.யை தனியாரிடம் விற்கப்போகிறோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு ஆண்டுக்குள் என்.எல்.சி.யை விற்க உள்ள மத்திய அரசுக்கு மாநில திமுக அரசு எதற்கு மக்களை அச்சுறுத்தி, துன்புறுத்தி நிலங்களை கையகப்படுத்திக் கொடுக்கிறது.

இதனால் தான் என்.எல்.சி.யை பாமக எதிர்க்கிறது

அங்கே இருக்கின்ற மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னும் வேலை கொடுக்கவில்லை. 37 ஆயிரம் ஏக்கர் நிலம் கொடுத்த மக்களுக்கு மொத்தத்தில் 1,800 பேருக்கு தான் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த 1,800 பேரில் அனைவரும் தற்போது வேலையில் இல்லை. அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டனர். தற்காலிகமாக சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்துள்ளனர்.

என்.எல்.சி. சமீபத்தில் 297 பேர் ஜூனியர் பொறியாளர்களை வேலைக்கு எடுத்திருக்கின்றனர். அதில் ஒரு நபர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கிடையாது. வேலையும் கொடுப்பதில்லை. வாழ்வாதாரத்தை அழிக்கிறது. நிலத்தடி நீர், விவசாயத்தை ஒழித்துவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் பாதிப்பு. அதனால் தான் என்.எல்.சி.யை பாமக எதிர்க்கிறது என்று தெரிவித்தார்.