நேற்றைய ஆட்டம்
மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நேற்று (மார்ச்-12) மும்பை பிரபோர்ன் மைதானத்தில் யுபி வாரியர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அரைசதம் அடித்த அலைஸா
முதலில் களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைஸா ஹீலி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய டாலியா மெக்ராத் பொறுப்புடன் ஆடி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். அலைஸா ஹீலி மற்றும் டாலியா மெக்ராத் தவிர வேறு யாரும் யுபி வாரியர்ஸ் அணிக்கு அதிக ரன்கள் அடிக்கவில்லை. இதன்மூலம் யுபி வாரியர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.
160 ரன் இலக்கு
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையான ஹைலி மேத்யூஸ் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான யஸ்டிகா பாட்டியா 42 ரன்கள் அடித்து அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தார்.
அபார வெற்றி
அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் நடாலி ஸ்கிவர் பிரண்ட் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் செய்து கடைசிவரை நின்று மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற செய்தனர். ஹர்மன்ப்ரீத் கௌர் 53 ரன்களும், ஸ்கிவர் பிரண்ட் 45 ரன்களும் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்று, இந்த சீசனில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.