திருச்சியில் பேராசிரியையை தாக்கி உடலை இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி வஉசி சாலை பகுதியில் வசித்து வருபவர் சீதா லட்சுமி. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கமாக மாலை நேரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்குள்ள மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன் கொள்ளை
கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு நின்ற செந்தில் என்ற வாலிபர் தான் வைத்திருந்த மரக்கட்டையால் பேராசிரியரின் தலையின் பின்பக்கமாக தாக்கி, அவர் கீழே விழுந்தவுடன் அவர் கால்களை பிடித்து தரதரவென இழுத்து சென்று அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளார்.
வழக்குப்பதிவு
இது குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட நபர் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த செந்தில் குமார் (32) என்பதும், தற்போது காந்தி மார்க்கெட் தாராநல்லூர் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.