Tamil News
Tamil News
Monday, 20 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

திமுக அரசு மூன்றாவது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையடையச் செய்வதாக இல்லாமல் அவர்களை மேலும் வேதனையின் விளிம்பிற்குத் தள்ளும் வகையில்தான் இருக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

இன்னும் எத்தனை பட்ஜெட்டுகள் வரை காத்திருக்க வேண்டும்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வேளாண்மை அல்லாத திட்டங்களுக்காக விளை நிலங்களை அரசே கையகப்படுத்தி வரும் நிலையில், அதற்கு மாற்று நடவடிக்கை என்ன என்பதை வேளாண் பட்ஜெட்டில் ஏன் சொல்லவில்லை? கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசின் ரூ.2821 தொகையுடன் கூடுதலாக ரூ.195 வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000  என்று திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் எத்தனை வேளாண் பட்ஜெட்டுகள் தாக்கலாவதற்கு விவசாயிகள் காத்திருக்க வேண்டுமோ என தெரியவில்லை.

தென்படவில்லை

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டபோதிலும், நாட்டு மக்களுக்கு உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய வகையில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தையே ஏற்படுத்தும்.

முருங்கை, மல்லிகை பூ உற்பத்தி இயக்கம் குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்க அமசங்களாக இருந்தாலும், நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் உற்பத்திக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது போதுமானது இல்லை. கேரளாவைப் போல வேளாண் விளை பொருட்களுக்கு தகுந்த விலை நிர்ணயிக்க, ஆய்வுகள் மேற்கொண்டு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட போதிலும், அதற்கான முன்னெடுப்பு மூன்றாவது வேளாண்மை பட்ஜெட்டிலும் தென்படவில்லை.

மொத்தத்தில் திமுக அரசு மூன்றாவது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண்மை பட்ஜெட், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையடையச் செய்வதாக இல்லாமல் அவர்களை மேலும் வேதனையின் விளிம்பிற்குத் தள்ளும் வகையில்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.