சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி புனித யாத்திரை சென்ற 20 பேர் பலியாகி உள்ளனர்.
மெக்கா பயணத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
சவூதி அரேபியாவின் தென்மேற்கே ஆசிர் மாகாணத்தில் புனித யாத்திரை சென்றவர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அவர்கள் மெக்கா நகரை நோக்கி பயணித்த நிலையில், அந்த மாகாணத்தின் ஆபா நகரை இணைக்கும் சாலையில் செல்லும்போது, திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியுள்ளது. இதில், பாலம் ஒன்றின் மீது மோதி பேருந்து விபத்திற்குள்ளானது.
20 பேர் பலி; 29 பேர் காயம்
இந்த சம்பவத்தில் பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது. சுற்றிலும் வான்வரை கரும்புகை பரவி இருளாக காட்சி அளித்தது. இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள், வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் சிக்கி புனித யாத்திரைக்கு சென்ற 20 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் 29 பேர் வரை காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.