Tamil News
Tamil News
Tuesday, 04 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் அணி, பஞ்சாப்புடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. 

பலம் வாய்ந்த ராஜ்ஸ்தான்

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 8-வது லீக்கில் ராஜஸ்தான் ராயல்சும், பஞ்சாப் கிங்சும் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பேரும் வரிசையாக அரைசதம் அடித்ததுடன், அணியையும் 200-ஐ கடக்க வைத்தனர். பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் மிரட்டிய ராஜஸ்தான், ஐதராபாத்தை 131 ரன்னில் சுருட்டியது.

சிறப்பான பங்களிப்பை அளிக்கும் வீரர்கள் 

முதல் ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட் வீழ்த்தியதும், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை சாய்த்ததும் வெற்றியை எளிதாக்கின. இவர்களை தவிர அஸ்வின் உள்ளிட்ட மற்ற பந்து வீச்சாளர்களும் தேவையான பங்களிப்பை அளித்து வருவது அந்த அணிக்கு பலத்தை அதிகரித்துள்ளது. இதனால் இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

வெற்றியுடன் வலம் வரும் பஞ்சாப்

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மழை பாதிப்புக்கு இடையே 7 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் கேப்டன் தவான் (40 ரன்), பானுகா ராஜபக்சே (50 ரன்) கணிசமான ரன் எடுத்தனர். சாம் கர்ரன், சிகந்தர் ராசா, ஷாருக்கான் ஆகிய ஆல்-ரவுண்டர்கள் பஞ்சாப்பின் பிம்பமாக திகழ்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், நாதன் எலிஸ், ராகுல் சாஹர் நம்பிக்கை அளிக்கிறார்கள். இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் மல்லுகட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10-ல் பஞ்சாப்பும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.