Tamil News
Tamil News
Sunday, 09 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய பின்னிருப்புக் காவல் படையில் (CRPF) ஆட்சேர்க்கைக்கான தேர்வை தமிழில் நடத்த வலியுறுத்தி ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

நமது அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழியாக அங்கீகரிக்கும்போதிலும், மேற்கூறிய ஆட்சேர்க்கைக்கான கணினித் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 

தமிழர்களின் முன்னேற்றத்திற்கு எதிரானது

சி.ஆர்.பி.எப். வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் மற்றொரு மறைமுக அம்சமாக, மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழியில் அடிப்படைப் புரிதலுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தேர்வு இந்தி மொழி பேசுவோருக்கே மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால், மத்திய பின்னிருப்புக் காவல்படையின் இந்த அறிவிக்கை தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிபோரின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. இது தன்னிச்சையானது மட்டுமல்லாமல் பாகுபாடு காட்டக்கூடியதும் ஆகும்.

சம வாய்ப்பை பாதிக்கிறது

விருப்புவெறுப்பின்றி இந்த அறிக்கையை நோக்குகையில், இது தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போருக்கு எதிரான பாகுபாட்டுடனும், அவர்கள் நாட்டின் துணைராணுவப் படையில் பணியாற்றும் வாய்ப்பைப் பறிக்கும் நோக்குடனும் அமைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கணினித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது இத்தேர்வை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.

எனவே, தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களுக்கும் சி.ஆர்.பி.எப்-ல் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இக்கணினித் தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களைச் செய்ய மத்திய பின்னிருப்புக் காவல்படை அதிகாரிகளை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என கடிதம் எழுதியுள்ளார்.