மும்முனை போட்டியான கர்நாடகா முதலமைச்சர் பதவி.. டெல்லி விரைந்த டி.கே.சிவக்குமார்.. கதகதக்கும் காங்கிரஸ்.!

dk shi

கர்நாடக காங்கிரஸின் வழக்கம்

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதம் எழத் தொடங்கியது. கர்நாடகா காங்கிரஸின் மூத்த தலைவராக சித்தராமையா இருக்கிறார். கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தலைவராக டி.கே.சிவகுமார் இருந்து வருகிறார். கர்நாடகாவில் யார் கட்சியின் தலைவராக இருக்கிறாரோ அவர்தான் முதல்வராவார் என்பது வழக்கம். 

அகில இந்திய தலைமை முடிவு செய்யும்

இதையடுத்து, டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அவர் வீட்டின் முன் திரண்டு முதலமைச்சராக வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்தநிலையில், கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்றைக்கு முந்தைய தினம்  நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் சட்டமன்றக்குழு தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்க இருந்தது. நேற்றைக்கு முந்தைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய, அகில இந்திய  காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் வழங்கி, தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

புயலை கிளப்பிய 31 எம்.எல்.ஏக்கள்

இந்த தீர்மானத்திற்குப் பிறகு, கர்நாடகா தேர்தலின் பொறுப்பாளர்களாக இருந்த, சுஷில் குமார் ஷிண்டே மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களிடம் தனித்தனியாக அழைத்து அவர்களின் விருப்பத்தை கேட்டறிந்தார்கள். அதில் புதிதாக வெற்றி பெற்றுள்ள 31 எம்.எல்.ஏ-க்கள் டி.கே.சிவக்குமார் முதலமைச்சராக வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகின.

கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் இரு கரங்களாக இருந்தவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார். சித்தராமையாவிற்கு இது கடைசி தேர்தல் என்பதால் அவருக்கு பதவி வழங்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்பட்டது. இருந்தாலும், கர்நாடகா காங்கிரஸின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தியவர் டி.கே.சிவக்குமார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

மூன்றாவது தலையா?

இவர்களில் ஒருவரை முதல்வராக்கினால், இன்னொருவருக்கு சிக்கல் ஏற்படும் என்ற வகையில், இருவருக்கும் இல்லாமல் வேறு சமுதாயத்தில் அதாவது, கர்நாடாகாவில் வீரேந்திந்திர படேலுக்குப் பிறகு, லிங்காயத் சமுதாயத்தில் யாரும் முதலமைச்சராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக்கலாம் என்ற பேச்சுக்களும் அடிபட்டது. 
இந்த நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த பரமேஸ்வராவை கர்நாடக முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகா மாநிலம் தும்குரு பகுதியில் அவருடைய ஆதரவாளர்கள் இன்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கர்நாடகாவில் பதற்றம் நிலவியது. 

மேலிடத்தின் முடிவுக்கு நாங்கள் விட்டுவிட்டோம்

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்ததையடுத்து, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களின் வீட்டில் யார் முதல்வர் என்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சித்தராமையா டெல்லி புறப்பட்டு சென்றார். ஆனால், டி.கே.சிவக்குமார், டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கச் செல்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று நேற்று தெரிவித்திருந்தார். மேலும், கட்சி மேலிடத்தின் முடிவுக்கு நாங்கள் விட்டுவிட்டோம், எனக்கு என்ன பணி வழங்கப்படுகிறதோ அதை செய்வேன் என தெரிவித்திருந்தார்.

நாளை தெரியும் முதலமைச்சர் யார் என்பது

இந்தநிலையில், இன்று மாலை சரியாக 5:10 மணியளவில் டெல்லி அடைந்திருக்கிறார் டி.கே.சிவக்குமார். கர்நாடகா தேர்தல் மும்முனை போட்டியாக இருந்தநிலையில், தற்போது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முதல்வர் பதவிக்கு மும்முனை போட்டியாக இருந்து வருகிறது. இந்த சூழலில், டெல்லியில் தற்போது ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தற்போது நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, நாளைக்குள் முடிவு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.