வேளாண் பட்ஜெட்டை பாராட்டிய நடிகர் கார்த்தி.. பதிலளித்த முதலமைச்சர்.!

website post (13)

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் உழவன் பவுண்டேசன் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கார்த்தி சிவக்குமார். 

பாராட்டுக்கள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவித்துள்ள திட்டங்களில் தங்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை உழவர்கள் முழுமையாய் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு, மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

இதனையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்

அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால், அவைகள் அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும். புழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதோடு மட்டுமின்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இது போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால், அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்களை இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் பதில்

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், அன்பின் கார்த்தி, உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்! உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்'; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண 'செயலாற்றுவோம்'! என்று குறிப்பிட்டுள்ளார்.