மது அருந்துபவர்கள் உயிருடன் இருக்க .... -  தமிழக அரசுக்கு நடிகர் கருணாஸ் கோரிக்கை

actor karunas

நேர் மாறாக செயல்படும் தமிழக அரசு 

திருச்சி மத்திய பேருந்த நிலையம் அருகில் உள்ள  கலையரங்கத்தில் அக்ரி எக்ஸ்போ -2023 என்ற பெயரில் வேளாண் கண்காட்சி இன்று தொடங்கி அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கண்காட்சியை பிரபல திரைப்பட நடிகர் கருணாஸ் நேரில் வந்து பார்வையிட்டார்,  அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட்  போன்ற மாநிலங்களில் அரசே பாரம்பரிய விவசாயத்தை முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் தமிழக அரசு அதற்கு நேர் மாறாக செயல்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். எனவே, தமிழக அரசு மரபு சார்ந்த பாரம்பரிய இயற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

நஞ்சில்லா உணவை வழங்க வேண்டும்

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மதுப்பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், வரும் காலங்களில் மது அருந்துபவர்கள் உயிருடன் இருப்பதற்காக இயற்கை விவசாயத்தை பாதுகாத்து உணவு உற்பத்தியை மேற்கொள்ள  வேண்டும் எனவும், மது என்னும் நஞ்சை தாராளமாக கொடுக்கும் தமிழக அரசு நஞ்சில்லா உணவை வழங்க முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

சட்டமன்றத்தில் பட்ஜெட் ; வெளியே லே - அவுட் ;

மேலும் அவர் பேசியதாவது, விவசாயத்திற்கு சட்டமன்றத்தில் பட்ஜெட் போடுகிறார்கள், வெளியே விவசாய நிலத்திற்கு லே-அவுட் போடுகிறார்கள், மக்கள் தான் சிந்திக்க வேண்டும். திட்டம் போடுகிற அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்துகிற அமைச்சர்களும், அவர்களை வழிநடத்தக்கூடிய முதலமைச்சரும் தான் யோசிக்க வேண்டும். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியும். நான் சொன்னால் அது மாற்றம் வரப்போகிறதா? அல்லது குற்றச்சாட்டு நிவர்த்தி செய்ய போகிறார்களா? மத்திய மாநில அரசியலுக்கு நான் வைக்கிற ஒரு கோரிக்கை  இயற்கை விவசாயத்தை  அமெரிக்கா போன்ற மேற்கிந்திய நாடுகள்  முன்னெடுக்கும் இந்த தருணத்தில்  தமிழகத்தில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைக்கிறேன். என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.