முதலமைச்சரின் சாதனைகளை பார்க்கும்போது உந்துதலாக இருக்கிறது - நடிகர் சிவகார்த்திக்கேயன்  

actor sivakarthikeyan and minister k.n.nehru

புகைப்படக் கண்காட்சியை ரசித்து பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் 

முதலமைச்சரின் 70 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை " என்ற தலைப்பின் கீழ் திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த புகைபடக் கண்காட்சியை கடந்த 23 ஆம் தேதி நடிகர் பிரபு திறந்து வைத்தார். இந்த கண்காட்சியை கல்லூரிகளை சேர்ந்த மாணவ , மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், திருச்சியில் நடந்து வரும் புகைப்பட கண்காட்சியை இன்று நேரில் பார்வையிட்டார்.  ஒவ்வொரு அரங்கையும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்த சிவகார்த்திக்கேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 


நிறைய சாதனைகளை புரிந்த முதலமைச்சர் 

முதல்வர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு பற்றி புகைப்பட கண்காட்சி பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புகைப்படங்களை பார்க்கும்போது தெரிந்து கொண்டது என்னவென்றால் எவ்வளவு பெரிய உயரத்தை அடையணுமோ அதற்கு நிறைய வலிகளையும், தியாகங்களையும் தண்டி தான் வரணும் என்று  தெரிகிறது. பெரிய ஆளுமை கொண்ட மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை தாண்டி நிறைய சாதனைகளைப் புரிந்து இந்த இடத்திற்கு தமிழக முதல்வர் வந்திருக்கிறார்.  

ஒரு துறையில் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் அதை பார்க்கும் பொழுது  உந்துதலாக இருக்கும், ஆனால் இந்த புகைப்பட கண்காட்சியை காண்பவர்கள் எந்த துறை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மிகப் பெரிய ஈர்ப்பாக இருக்கும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என்றைக்காவது ஒருநாள் பெருசாக ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை  ஏற்படுகிறது. 

திருச்சி பையனாக..!!

எனக்கு மிகவும் பிடித்த  நம்ம ஊர் திருச்சியில் நான் எங்கே எல்லாம் விளையாண்டு படித்தேனோ அந்த இடத்தில் இப்படி ஒரு நிகழ்வில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று நான் ஒரு சினிமா துறையின் நடிகராக வருவதை தாண்டி , திருச்சி பையன் மற்றும் ஒரு கவர்மெண்ட் எம்பிளாய்-இன் மகனாக இன்றைக்கு இந்த கண்காட்சியை பார்ப்பது என்பது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாக இருக்கிறது. முதல்வருடைய  சிறுவயது  புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது.  முதல்வர் ஜெயிலில் இருந்த காட்சிகள் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் முதல்முறையாக இப்போதுதான் பார்க்கிறேன். எஃப் ஐ ஆர் காப்பி எல்லாம் கண்டபோது மிகவும் வியப்பாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார். இதன் பிறகு அங்கிருந்த வருகை பதிவேட்டில் நடிகர் சிவகார்த்திகேயன்  கையெழுத்திட்டார். இந்நிகழ்வின்போது அமைச்சர் கே.என்.நேரு, மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

ஆர்வத்துடன் கண்டு களிக்கும் பொதுமக்கள் 

இந்த கண்காட்சியில் சுமார் 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், அதில் கலைஞர் அவர்கள் பங்கேற்ற  மாநாட்டு புகைப்படங்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டங்கள் மற்றும் அரசு திட்டங்கள் என திமுகவின் வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக இந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது பலரையும் கவர்ந்தது.  இந்த புகைப்படங்களை பார்வையிடுவதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்து வரும் நிலையில்,  இந்த கண்காட்சியை திரைப்பட நடிகரும் கலை இயக்குனருமான ஜோ மல்லூரி சிறப்பாக வடிவமைத்திருந்தார்.