திருச்சி விமான நிலையத்தில் 6,850 அமெரிக்க ஆமை குஞ்சுகள் பறிமுதல்

American turtle

கடத்தி வரப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம், நேற்று காலை திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வத்தது. அதில் வந்த 2 பயணிகள் இரு பெரிய பெட்டிகளில் சிறிய அளவிலான ஆமைக் குஞ்சுகளை, உரிய அனுமதியின்றி முறைகேடாக கடத்தி வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மொத்தம் 6,850 ஆமைகளை உயிருடன் கடத்தி வந்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இந்திய நீர் நிலைகளை பாதிக்கும்

விசாரணையில் அவை தென்கிழக்கு அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த (ரெட் இயர்டு ஸ்லைசர் வகை) உயிரினங்கள் என்பதும், அவற்றை திட்டமிட்டு சிலர் கடத்தி விற்பனை செய்வதும் தெரியவந்தது. இந்த ஆமைக்குஞ்சுகளை வாஸ்து மீன்கள் மற்றும் பறவைகள் போல, சிலர் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வைத்துள்ளதாகவும் அதற்காக கடத்தி வரப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவற்றை இந்திய நீர்நிலைகளில் விட்டால், அவற்றின் வளர்ச்சி பாரம்பரிய இந்திய உயிரினங்களை பாதிக்கும் என்பதால், வனத்துறையினர் இவற்றை இந்தியாவில் அனுமதிப்பதில்லை.

திருப்பி அனுப்பப்படும்

இது குறித்து மாவட்ட வன அலுவலர் கிரண் கூறுகயில், சுங்கத்துறையினர் அளித்த தகவலின்பேரில், வனத்துறை அலுவலர்கள் விமான நிலையம் சென்று பறிமுதல் செய்யப்பட்ட உயிரிகளை ஆய்வு செய்ததில், அவை இந்திய உயிரியினத்தைச் சேர்ந்தவையல்ல. தென்கிழக்கு அமெரிக்க நாடுகளை பூர்வீகமாக கொண்ட ரெட் இயர்டு ஸ்லசர் என்ற வகையைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. எனவே இது குறித்து வனத்துறை உயிரியல் பிரிவு வல்லுநர்கள் ஆய்வுக்குப் பின்னர் திருப்பி அனுப்ப ப்படும் என்றார். இதே போல கடந்த 2019 ஆம் ஆண்டும் ஆமைகள் கடத்தி வரப்பட்டு, அவை மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.