10 வருடம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு கோரி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்.

protest

நிபந்தனையற்ற பதவி மற்றும் ஊதிய உயர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பள்ளி, கல்லூரிகள் போன்று அங்கன்வாடியிலும் 2 முதல் 6 வயது வரை பயிலும் மாணவர்கள் நலன் கருதி மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும். எரிவாயு சிலிண்டருக்கான தொகையை பில்லில் உள்ளவாறு முழுமையாக ரூ.1205 வழங்க வேண்டும். 1993-ல் பணிக்கு வந்த பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 வருடம் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 5 வருடம் பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கு முதன்மை மைய ஊழியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த உதவியாளர்களுக்கு எந்தவிதமான நிபந்தனையுமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். 

காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

மேலும், அங்கன்வாடி மையங்களின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். லோக்கல் டிரான்ஸ்பர் உடனடியாக வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் பார்ப்பதால் மன உலைச்சலுக்கு ஆளாகி வருவதை சரி செய்யும் வகையில், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  பிரதான மையங்களை மினி மையமாகவும், மினி மையத்தை பிரதான மையத்துடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்பாட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்று அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.