ஜல்லிக்கட்டிற்கு தடையா? - உச்சநீதிமன்றத்தில் வழக்கு! 

jallikattu

தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக்கோரி தொடர்ந்த பல்வேறு வழக்குகள் இந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பாரம்பரிய வீர விளையாட்டுகளுள் ஜல்லிக்கட்டும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர், பாலமேடு, புதுக்கோட்டை மாவட்டம் என பல மாவட்டங்களில் பிகவும் விமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியினால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கின் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 

இதனால் 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தன்னெழுச்சியாக எழுந்த போராட்டம் நடைபெற்றது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம்  29(1) என்ற பிரிவு இந்திய மக்களுக்கு தனித்துவமான கலாச்சாரம், மொழி, எழுத்து, ஆகியவற்றை பாதுகாத்து போற்றி வளர்ப்பதற்கான உரிமையை வழங்குகிறது. இதனால் தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு, பிரிவு அடிப்படையிலும், ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் என்ற அடிப்படையிலும், சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த தமிழக மக்களும் ஜல்லிக்கட்டை கொண்டாடியுள்ளனர் என்றும் அதற்கான சான்றுகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது எனவும் வாதாடி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சட்டமியற்றி அனுமதியளித்தது. 

இந்த சட்டத்தை எதிர்த்து 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இந்த வார இறுதியில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

இந்த மனுக்களுக்கு எதிராக பதில் மனு தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு, ஜல்லிக்கட்டு போட்டியால் விலங்குகளுக்கு எந்த வித ஆபத்தோ, துன்பமோ ஏற்படுத்தப்படவில்லை என்றும், தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாகவே ஜல்லிக்கட்டு கொண்டாடப்படுகிறது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதன் மூலம் நாட்டு வகை மாடுகள் பாதுக்கப்பட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.