இந்திய நதிகளில் சிறப்பு பூஜைகள்
சென்னை, அம்பத்தூர் புவனேஸ்வரி பீடத்தை சேர்ந்தவர் பரமஹம்ச ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள். இவர் உலக நன்மைக்காக வேண்டியும், கொரோனா போன்ற கொடிய நோய்கள் நாட்டு மக்களை தாக்காமல் இருக்க வேண்டியும் இந்தியா முழுவதும் பயணம் செய்து கங்கை, யமுனை, காவிரி, நர்மதை, கோதாவரி உள்ளிட்ட பல்வேறு நதிகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் தியானங்கள் செய்து வருகிறார்.
காவிரி ஆற்றில் கழிவுகளை அகற்றினார்
மேலும் இதுபோன்ற நதிகளுக்கு அவர் செல்லும்போது பக்தர்கள் விட்டுச் சென்ற துணிகள், கழிவுகளை அகற்றுவது வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் திருச்சிக்கு வந்த அவர் காவிரி ஆறு, அம்மா மண்டபம் படித்துறை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டார். காவிரி ஆற்றில் தேங்கி கிடந்த துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள், மனித கழிவுகளையும் அவர் சுமார் 2 மணிநேரம் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
ஆறுகளை பாதுகாக்க வேண்டும்
பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘காவிரி, தாமிரபரணி, வைகை, கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா உள்பட பல்வேறு ஆறுகளில் கடந்த 37 ஆண்டுகளாக தூய்மை பணிகளை செய்து வருகிறேன். இதுபோன்ற ஆறுகள் பெற்றத் தாய்க்கு சமமானது ஆகும். ஆறுகளில் மலம் கழிப்பது, குப்பைகளை வீசுவது, பக்தர்கள் துணிகளை கழற்றி விடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இந்த ஆறுகள் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து பயன்பட்டு வருகின்றனர். தெய்வம் போன்ற இந்த ஆறுகளில் பொதுமக்க்ள கழிவுகளை கொட்டக்கூடாது. ஆறுகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டதை பார்த்து ஏற்கனவே ஜனாதிபதி அப்துல்கலாமும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் எனக்கு பலமுறை பாராட்டு தெரிவித்து உள்ளனர் என அவர் கூறினார்.