தன்மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுப்பதற்காக பா.ஜ.க. கிட்டத்தட்ட ஆயிரம் கோடி அளவுக்கு பணத்தினை செலவழித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யான ராகுல்காந்தி, ’பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார்.
கன்னியகுமரி முதல் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை தொடரும் இந்த பாதயாத்திரையானது, இதுவரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என தென்னிந்திய பகுதிகளை முடித்து கொண்டு மராட்டிய மாநிலத்திற்கு சென்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச எல்லைக்குள் வந்த ராகுல்காந்தி தொடர்ந்து பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் காங்கிரஸ் தொண்டர்களும் மூவர்ண கொடியை ஏந்தியபடி உற்சாகமுடன் நடந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ”எனது தோற்றத்தினை கெடுக்கவும், என்மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுப்பதற்காகவும் பா.ஜ.க. கிட்டத்தட்ட ஆயிரம் கோடி அளவுக்கு பணத்தினை செலவழித்துள்ளது” என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், ”அவர்கள் என்னை பற்றிய ஒரு தோற்றம் உருவாக்கி வைத்தது மட்டுமல்லாமல், தீங்கு தர கூடிய ஒன்றாகவும் மக்கள் மத்தியில் மாற்றியுள்ளனர்.
ஆனால், அவை எனக்கு நன்மையே. ஏனெனில், என்னிடம் உண்மை உள்ளது. என் மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள், நான் சரியான திசையில் செல்கிறேன் என்று எனக்கு எடுத்துரைக்கிறது” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.