'எனக்கு ஓய்வா?... Never..' தோனி சொன்னது என்ன?

dhoni rese

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடாத தல தோனி,  2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்துவித சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

எப்போது ஓய்வு பெறுவீர்கள்?

பின்னர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த தோனியிடம் நிருபர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் ஒவ்வொரு வருடமும், எப்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவீர்கள்? என்று கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அதற்கு தோனியும் தனக்கே உரிய ஸ்டைலில் பதில் கூறி வந்தார்.

தோனி ரசிகர்கள் ஆரவாரம்

இந்நிலையில், இந்த வருடம் தான் தோனிக்கு கடைசி சீசன் என்று பலரும் பேசி வந்தனர், அவரும் அதற்கேற்றார் போல் போட்டிகளின் முடிவில் பேசி வந்தார். ஓய்வு குறித்து தோனியும் ஆங்காங்கே அது உண்மைதான் என்பதுபோல கூறியதால் ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியின் போதும் எப்போதும் கொடுக்கும் ஆரவாரத்தைவிட இம்முறை 200 சதவீத ஆரவாரத்துடன் தோனிக்கு Farewell கொடுக்கும் விதம் போலவே திரண்டு ‘தோனி.. தோனி.. தோனி’ என்று மைதானத்தையே ஆட்டம் காண வைத்தனர். 

இதுதான் கடைசி சீசனா

இந்த நிலையில், தன்னுடைய ஓய்வு குறித்து சூசகமாக பதில் அளித்துள்ளார் தல தோனி. நேற்றைய தினம் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும் நிகழ்வின்போது, முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் டேனி மாரிசன், ”உங்களுக்காக இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். உங்களுடைய கடைசி சீசனை என்ஜாய் செய்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

Never

“இதுதான் கடைசி சீசன் என்று நீங்களே முடிவு செய்து விட்டீர்களா?” என்று சிரித்தபடியே பதில் கூறிவிட்டு நகர்ந்தார் தோனி. அதன்பிறகு வர்ணனையாளர் மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம், “தோனி மீண்டும் அடுத்த வருடம் வருகிறார். கேட்டுக் கொள்ளுங்கள்” என்றும் அறிவித்தார். இந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் டிரெண்டாகி வருகிறது.