திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் கள ஆய்வு பணிகள் முழுவீச்சில் நடைபெறும்- அமைச்சர் கே என் நேரு பேட்டி.

kn nehru

முதலமைச்சர் கோப்பை போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 12.02.2023 முதல் 28.02.2023 வரை அண்ணா விளையாட்டரங்கம். ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி மற்றும் ஜமால் முகமது கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா திருச்சி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் செளவுந்தர பாண்டியன் மற்றும் மாவட்ட அதிகார்கள் கலந்துக்கொண்டனர். 

5 பிரிவுகளில் பல்வேறு போட்டிகள்

பொதுபிரிவு, பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகிய 5 வகை பிரிவுகளில் தடகளம், கபாடி, இறகுபந்து, வாலிபால், சிலம்பம், சதுரங்கம், கிரிக்கெட், கூடைப்பந்து, கையுந்துபந்து, சிறப்பு கையுந்துபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைபந்து மற்றும் எறிபந்து போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் 3912 ஆண்கள் மற்றும் 1879 பெண்கள் என மொத்தம் 5791 நபர்கள் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் இணைந்து சான்றிதழ், பதக்கங்கள், பரிசு தொகையை வழங்கினார்கள். குறிப்பாக முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3000/-, இரண்டாம் பரிசு தலா ரூ.2000/- மற்றும் மூன்றாம் பரிசு தலா ரூ.1000/ எனவும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

முழுவீச்சில் முதலமைச்சரின் கள ஆய்வு பணிகள்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.நேரு; திருச்சி மாவட்டத்தில் பாதாள சாக்கடை பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளதாகவும்,  விரைவில் முழுமையாக பணிகள் முடிக்கபடும் என்றும் தெரிவித்தார். மேலும், புதிய காவிரி பாலம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அடிக்கல் நாட்டுவதற்கும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கு  அனுமதி கேட்டுள்ள நிலையில்,அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் நடைபெறும் என்றும் கூறினார். அதேபோல, முதலமைச்சரின் கள ஆய்வு பணிகள் விரைவில் முழுவீச்சில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.